பெரம்பலூரில் ஷீரடி மதுரம் சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழா
பெரம்பலூர்: பெரம்பலூர் ஸ்ரீ ஷீரடி மதுரம் சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழா நேற்று வெகுவிமர்சையாக நடந்தது. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் தீரன் நகர் எதிரில் ரூ.3 கோடியில் ஸ்ரீ ஷீரடி மதுரம் சாய்பாபா கோவில் கட்டப்பட்டு, மார்பிள் ஸ்டோனால் செய்யப்பட்ட சாய்பாபா முழு உருவ சிலை வைக்கப்பட்டுள்ளது. கோவில் கீழ்புறம் தியான மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவில் மகா கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த மே மாதம் 4ம்தேதி பந்த கால் முகூர்த்த சிறப்பு பூஜை செய்யப்பட்டு பந்தகால் நடப்பட்டது. கும்பாபிஷேக விழா கடந்த 18ம் தேதி கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து 19ம் தேதி பெரம்பலூர் பிரம்மபுரிஸ்வரர் கோயிலிருந்து முளைப்பாரி ஊர்வலம் யானை, குதிரையுடன் நடந்தது. 20ம் தேதி யாகசாலை பூஜை தொடங்கியது. 21ம்தேதி இரண்டாம் கால யாகபூஜையும், இரவு பக்தி மற்றும் நாட்டுப்புற இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நேற்று 22ம் தேதி காலை 4ம் கால பூஜையும், தீபாராதனையும் நடைபெற்றதை தொடர்ந்து காலை 9 மணியளவில் கலசங்கள் புறப்பாடும், 10 மணியளவில் விமான கோபுரம் மற்றும் மூல தேவர்களுக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது. பின்னர் 12 மணியளவில் மகா அபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி கடந்த 18ம்தேதி முதல் 22ம்தேதி இரவு வரை அன்னதானம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.