உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகராஜா கோயிலில் பெண்கள் பால் ஊற்றி வழிபாடு!

நாகராஜா கோயிலில் பெண்கள் பால் ஊற்றி வழிபாடு!

நாகர்கோவில்: நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோயிலில் ஆவணி ஞாயிறு விழாவை ஒட்டி ஆயிரக்கணக்கான பெண்கள் நாகருக்கு பால் ஊற்றி வழிபாடு நடத்தினர். நாகரை மூலவராக கொண்டு தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்ட தலைநகர் நாகர்கோவிலில் அமைந்துள்ளது நாகராஜாகோவில். இந்த பெயரில்தான் நாகர்கோவில் ஊர் பெயரும் அமைந்துள்ளது. கோயில் பெரியதாக இருந்தாலும் நாகர் பிரதிஷ்டை இன்னும் ஓலைக் கூரையில்தான் அமைந்துள்ளது. இங்குள்ள புற்றில் இருந்து வரும் மண்தான் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இப்படி சிறப்பு பெற்ற நாகராஜா கோயிலில் ஆவணி மாதம் ஞாயிற்றுக் கிழமை விசேஷ தினமாகும். இந்த நாளில் நாகருக்கு பால் அபிஷேகம் நடத்தினால் ராகு- கேது தோஷம் நீங்கும், திருமண தடை நீங்கும், திருமணமான பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும், தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது பக்தர்களின் குறிப்பாக பெண்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த ஆண்டு முதல் ஆவணி ஞாயிறு மற்றும் ஒன்றாம் தேதி என்பதால் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகளவு இருந்தது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான பெண்கள் நீண்ட வரிசையில் நின்று நாகருக்கு பாலபிஷேகம் நடத்தி வழிபாடு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !