நாகை நவநீத கிருஷ்ணன் கோயிலில் புதிய திருத்தேர் வெள்ளோட்டம்!
நாகப்பட்டினம்: நாகையில், பிரசித்திப்பெற்ற நவநீத கிருஷ்ணன் சுவாமி கோயிலில் புதிய திருத்தேர் வெள்ளோட்டம் நடந்தது. நாகையில் ருக்மணி, சத்யபாமா சமேத நவநீத கிருஷ்ண சுவாமி கோயில் உள்ளது.இக்கோயிலில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி திருவிழா 10 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும். இவ்வாண்டுக்கான திருவிழா கடந்த 8 ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் சூர்யபிரபை, அம்ச, சேஷ, கருடசேவை, ஹனுமந்த, யானை, குதிரை வாகனங்களில் கிருஷ்ண பகவான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். முக்கிய விழாவாக வரும் 16ம்தேதி திருத்தோரோட்டமும், கிருஷ்ண ஜெயந்தி விழாவும் நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று காலை 9 மணியளவில் மேலக்கோட்டை வாசலில் இருந்து நவநீத கிருஷ்ணன் சுவாமி கோயிலுக்காக புதிதாக உருவாக்கப்பட்ட திருத்தேர் வெள்ளோட்டம் நடந்தது.
இதையொட்டி சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டு புனிதநீர் மற்றும் சந்தனம் திருத்தேரில் தெளிக்கப்பட்டு மேலக்கோட்டைவாசல், பெருமாள் கோயில் மேலவீதி, வடக்கு வீதி வழியாக திருத்தேரை திரளாக பக்தர்கள் வடம்பிடித்து நிலையடிக்கு கொண்டு வந்தனர். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சிவக்குமார் மற்றும் நவநீத கிருஷ்ண சுவாமி கைங்கர்ய சபாவினர் செய்திருந்தனர்.