சரஸ்வதி நாம ஜப வேள்வியில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு!
கோவை : கல்விக்கடவுளான சரஸ்வதி தேவியின் அருளை மாணவர்கள் பெறுவதற்காக, ஆனைகட்டி ஆர்ஷவித்யா குருகுல சுவாமி தயானந்த சரஸ்வதியால் இயக்கப்படும் தர்மரக்ஷண சமிதி தமிழகம் முழுக்க சரஸ்வதி நாமஜப வேள்வியை, நவராத்திரி நாட்களில் நடத்தி வருகிறது. இவ்வேள்வி கோவை ஒப்பணக்காரவீதி அத்தி விநாயகர் கோவிலில் இன்று காலை 6.00 மணிக்கு நடக்கிறது. இதில் பள்ளி மற்றும் கல்லுாரி, மாணவர்கள் பங்கேற்கலாம்.புரட்டாசி மாதம் தோன்றும் அமாவாசை திதிக்கு அடுத்த நாள், பிரதமை திதியிலிருந்து துவங்கும் சரஸ்வதி நாமஜெபவேள்வி, தொடர்ந்து 10 நாட்களுக்கு, அடுத்து வரும் தசமி திதி வரை (நவராத்திரி நாட்கள் முடிய) தொடரும். அதிகாலை நேரம், காலை 6.00 மணியிலிருந்து 6.15 மணி வரை நடக்கும் இவ்வேள்வியில், சரஸ்வதி நமஸ்துப்பியம் என்று துவங்கும் மந்திரத்தை தொடர்ந்து, 108 முறை மாணவர்கள் தொடர்ந்து, உரக்க கூறுகின்றனர். தொடர்ந்து சரஸ்வதி தேவிக்கு பூஜைகள் நடக்கிறது.அதன் முடிவில் மாணவர்களின் நினைவாற்றலை மேம்படுத்துவதற்கும், சுறுசுறுப்புத்தன்மைக்கும், ஸாரஸ்வத ஹ்ருதம் என்ற ஆயுர்வேத மூலிகையிலான நெய்யை சுவாமிக்கு அபிஷேகம் செய்து அதன் பின், ஜபவேள்வியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் பங்கேற்க மாணவர்களை, தர்மரக்ஷண சமிதி அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு கட்டணங்கள் ஏதும் இல்லை. இந்த வேள்வியில் அக்.,4ம் தேதி வரை, ஒப்பணக்காரவீதி அத்தி விநாயகர் கோவிலில், காலை 6.00 மணிக்கு நடைபெறும்.இதுகுறித்த விபரங்களுக்கு, 98430 55329 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.