உளுந்துார்பேட்டை சாரதா ஆசிரமத்தில் நவராத்திரி விழா!
உளுந்துார்பேட்டை ஸ்ரீசாரதா ஆசிரமத்தில் நவராத்திரி விழா நேற்று துவங்கியது. உளுந்துார்பேட்டை ஸ்ரீசாரதா ஆசி ரமத்தில் நவராத்திரி விழா நேற்று காலை 10:00 மணிக்கு துவங்கியது. ஆசிரம தலைவர் யத்தீஸ்வரி ராமகிருஷ்ண ப்ரியா அம்பா தலைமை தாங்கி விழா நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார். நவராத்திரியையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஒரு மைய கருத்தை அடிப்படையாகக் கொண்டு கொலு அமைக்கப்படும். இந்த ஆண்டு, சவுராஷ்டிரா தேசம், தேவநகரை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த சோமகாந்தன் என்ற மன்னரின் சிறந்த ஆட்சியையும், வாழ்க்கையும் சித்திரிக்கும் வகையில் தத்துரூபமாக காட்சிகள் சிலைகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. அதில் சோமகாந்தன் மன்னன் சிறப்பான ஆட்சியால் முன் ஜென்மத்தில் பிரம்மஹத்தி தோஷத்தால் அனுபவித்த தண்டனைகளும், பின்னர் நற்செயல்களால் மறுஜென்மத்தில் மன்னனாக பிறந்து மக்களுக்கு சிறப்பான ஆட்சி செய்ததையும், ஆசிரம மாணவர்கள் பார்வையாளர்களுக்கு எடுத்துரைத்தனர். இந்த நவராத்திரி விழாவில் ஏராளமான பள்ளி மாணவர்கள், கிராம மக்கள், மகளிர் சுய உதவி குழுவினர் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.