மகா வல்லப கணபதி கோவிலில் 108 கன்யா சிறப்பு பூஜை
ADDED :4126 days ago
திருவள்ளூர் : திருவள்ளூர், மகா வல்லப கணபதி கோவிலில், 108 கன்யா பெண் குழந்தைகளுக்கு, சிறப்பு பூஜை, ஹோமம் நடைபெற்றன. திருவள்ளூர், ஜெயா நகர் விரிவாக்கம் குமரவேல் நகரில் அமைந்துள்ள மகாவல்ல கணபதி கோவிலில், கடந்த, 24ம் தேதி முதல், தினமும் நவராத்திரி கொலு பூஜை நடைபெறுகிறது. நேற்று முன் தினம், 108 கன்யா பெண் குழந்தைகளுக்கு சிறப்பு பூஜை, ஹோமம் நடைபெற்றன. தொடர்ந்து, பெண் குழந்தைகளின் கால்களில் சந்தனம், குங்குமமிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின், மகா தீபாரதனை நடந்தது.புரட்டாசி மாதத்தை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் உள்ள, மகாவிஷ்ணுவுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றன. முதல் வாரம், பச்சை வஸ்திரம் அணிவித்து, துளசி மாலை அலங்காரமும், துளசி அர்ச்சனையும், இரண்டாவது வாரமான நேற்று முன்தினம், மஞ்சள் வஸ்திரம் அணிவித்து, மஞ்சள் மாலை அலங்காரம் நடைபெற்றன.