சண்முக நவகிரக பாமாலை!
ஆறுமுகன் புகழை அன்றாடம் போற்றிடவே
ஏறுமுகம் கிடைக்கும்! சேரும் புகழ் ஏராளம்!
ஒன்பான் கிரகமுமே ஓடிவந்து காப்பாற்றும்!
கண்ணான வேழமுகம் காப்பு
செப்பும் சிலம்புரியின் சிங்காரம் தந்த கவி
சுப்பிரமணியனுக்குத் தூதாகும்! அப்புறமாய்
ஒன்பான் கரிமுகமே ஓங்காரம் கேட்டவுடன்
இன்பமெல்லாம் கூட்டும் இனி!
சூரியன்:
ஆறிரு கரங்கள் கொண்டு அடியார்க்கு அருள் வழங்கி
சீரிய வாழ்வு நல்கும் செந்திலே பழநி வேலா!
சூரிய திசையிலே உன்னை துதிட்டேன் காக்க வாராய்!
காரியம் யாவினுக்கும் கை கொடுத்து உதவுவாயே!
சந்திரன்:
இந்திரன் முதலானோர்கள் இளமையாய் விளங்கும் உந்தன்
மந்திரம் சொல்லி நல்ல மகத்துவம் பெற்றது உண்டு!
சந்திர திசையில் உன்னை சந்தித்துப் போற்றுகின்றேன்!
வந்திடும் செல்வமெல்லாம் வரத்தினால் வழங்குவாயே!
செவ்வாய்:
ஔவைக்குக் கனி தந்தாய்! அருணகிரி நாதருக்கு
திவ்வியக் காட்சி தந்தாய் திருவருள் கொடுப்பதற்கே
செவ்வாயின் திசையின் உன்னை சேவித்துப் போற்றுகின்றேன்!
வையகம் புகழும் நல்ல வாழ்க்கையை வழங்கு வாயே!
புதன்:
கதம்பமும் முல்லை மல்லி கனிவுடன் சூடும் கந்தா
சதமென ஆயுள் நல்கி சகலமும் அருளுவாயே!
புதன் திசை நடக்கும் நேரம் போற்றி நான் வணங்குகின்றேன்!
இதம் தரும் வாழ்வை நல்கி இன்பத்தை வழங்குவாயே!
வியாழன்:
ஆறுமுகம் கொண்ட செல்வா! அழகிய வள்ளி நேசா!
பெருமைகள் வழங்கி நாளும் பிறர் போற்றும் வாழ்க்கை ஏற்க
குருதிசை நடக்கும் நேரம் குமரனை வணங்குகின்றேன்!
திருவருள் தருவதோடு செல்வாக்கும் அருளுவாயே!
சுக்ரன்:
தக்கதோர் வாகனங்கள் தனி இல்லம் மனைவி மக்கள்
அக்கறை கொண்டு நாளும் அசுரகுரு வழங்கும் மென்பார்
சுக்கிரதிசையில் நாளும் சுப்பிரமணியன் உன்னை
சிக்கெனப் பிடித்த தாலே சிறப்பெலாம் வழங்குவாயே!
சனி:
பிணியெலாம் அகலவேண்டிய பெரும் பொருள் கிடைக்க வேண்டி
அணிதிகழ் வாழ்வு வேண்டி அல்லல்கள் அகல வேண்டி
சனிசெல்லும் திசையில் நாளும் சண்முகா உனைத் துதித்தேன்!
கனிவுடைத் தெய்வம் நீயே காட்சி தந்தருளுவாயே!
ராகு:
நாகத்தின் வடிவாய் நின்று நடந்திடும் தோஷம் நீக்கி
போகத்தை வழங்குதற்க பூமியில் அருள் கொடுக்கும்
ராகுவின் திசையில் உன்னை ரட்சிக்க வணங்குகிறேன்!
பாதமே பணிந்தேன் கந்தா பதினாறு பேறும் தாராய்!
கேது:
ஆதரவு வழங்குதற்கும் அண்டிய வழக்கு எல்லாம்
தீதின்றி மாறுதற்கும் திறமைகள் தெரிவதற்கும்
கேதுவின் திசையில் உன்னை கோதின்றி வணங்குகின்றேன்
சக்தியின் மகனே வேலா சண்முகா அருளுவாயே!