கிறிஸ்துமஸ் கால சிந்தனை: உள்ளத்தில் தூய்மை!
தான் சார்ந்திருக்கும் தொழிலில் முன்னேறுபவரைக் கண்டு உடனிருப்பவர்கள் பொறாமை கொள்வது இயற்கை. அவரது பணியில் குறை கண்டுபிடித்து வீழ்த்த முயற்சிப்பர். இயேசு, கப்பர்நாகுமில் உள்ள ஒரு பிரமுகர் வீட்டிற்குச் சென்றார். அவரைக் காண ஏராளமானோர் குவிந்தனர். நோய்களை குணமாக்கும் அற்புத ஆற்றல் இயேசுவிடம் உள்ளது என்பதை எளியவர்கள் உணர்ந்திருந்தனர். பக்கவாதநோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை அவரது உறவினர்கள் கட்டிலோடு தூக்கி வந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் இயேசுவின் அருகில் அவர்களால் செல்ல முடியவில்லை. இதனால், வீட்டின் மேற்கூரையில் ஏறி, ஓடுகளைப் பிரித்து, கயிற்றில் கட்டிலை கட்டி இயேசுவின் முன்பாக நோயாளியை கீழே இறக்கினர். அவர்களின் விசுவாசத்தைக் கண்ட இயேசு, அந்த நோயாளியை பார்த்து, உனது பாவங்கள் மன்னிக்கப்பட்டன, என்றார். அங்கிருந்த மத குருக்கள், பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் கடவுளுக்கு மட்டுமே உள்ளது. தன்னுடைய செயலால் கடவுளை இவர் பழிக்கிறார், என முணுமுணுத்தனர். அவர்களை பார்த்த இயேசு,"எதிர்மறையான எண்ணங்களை எதற்காக மனதில் வளர்த்துக் கொள்கிறீர்கள். பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் கடவுளின் மகனுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்,” என்றார். அந்த நோயாளியிடம், "எழுந்து உன் கட்டிலை எடுத்துக்கொண்டு வெளியே போ,” என்றார். அந்த நிமிடமே அவர் குணமடைந்து வெளியே சென்றார். உள்ளத்தில் உள்ள பாவகறைகளை நீக்கிவிட்டால், உடல் மட்டுமல்ல. நம் எண்ணங்களும் தூய்மையானதாக இருக்கும் என்பதை இந்த சம்பவத்திலிருந்து உணர்ந்து கொள்ளலாம்.