அனுமன் சாலீஸா (அனுமனின் புகழ்) பாராயண முறை!
இங்கே அனுமன் சாலீஸா தமிழில் கொடுக்கப்பட்டுள்ளது. உடலைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, தூய ஆடை அணிந்து, தூய உள்ளத்துடன் ஆஞ்சநேயரைத் தியானிக்க வேண்டும். நெய் விளக்கேற்றி, தூபம் காட்டியபின் பதினொரு முறை இதை அன்புடன் கூறி வழிபட வேண்டும். நூறு முறை கூறுவது சிறப்பு. ஒவ்வொரு முறை முடியும்போதும் ஆஞ்சநேயரின் திருப்பாதங்களில் மலர்களைச் சமர்பிக்க வேண்டும். கோயிலிலோ, வீட்டின் தூய்மையான இடத்தில் ஆஞ்சநேயர் படத்தின் முன்னாலோ பாராயணம் செய்யலாம். செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் பாராயணம் செய்ய வேண்டும். பக்தியுடனும் அன்புடனும் ஹனுமன் சாலீஸா பாராயணம் செய்யப்பட்டால் நினைத்தது நடக்கும் என்பது பெரியோர் கூற்று. அவரது அருளால் எதுவும் நடக்கும் என்பதில் ஐயமில்லை.
எனது மனம் என்னும் கண்ணாடியை ஸ்ரீகுருதேவரின் திருப்பாத தூசியால் தூய்மைப்படுத்திக் கொண்டு நான்கு கனிகளைத் தருகின்ற ரகுகுலதிலகமான ஸ்ரீராமனின் மாசற்ற தெய்வீகப் பெருமைகளை விளக்கத் தொடங்குகிறேன்.
நான்கு கனிகள்:
1. அறம் - நல்வழி
2. பொருள் - நல்வழியில் ஈட்டிய செல்வம்
3. இன்பம் - நல்வழியில் நிறைவேற்றப் பெறும் ஆசைகள்
4. வீடு - சம்சார வாழ்விலிருந்து விடுதலை.
எனது அறிவோ குறுகியது, வாயு மைந்தனான ஆஞ்சநேயா, உன்னைத் தியானிக்கிறேன். எனக்கு வலிமை, அறிவு, உண்மை, ஞானம் எல்லாம் தருவாய். என்னைத் துன்பங்களிலிருந்தும் தவறுகளிலிருந்தும் விடுவிப்பாய்.
ஆஞ்சநேயா, நீ கடலைப் போலப் பரந்த அறிவும் நற்குணங்களும் பொருந்தியவன்.
வானவர்களின் தலைவன் மூன்று உலகங்களையும் உணர்வுற்றெழச் செய்பவன்.
உனக்கு வெற்றி உண்டாகட்டும்.நீ ஸ்ரீராமதூதன், எல்லையற்ற ஆற்றலின் உறைவிடம்.
அஞ்ஜனையின் மைந்தன். வாயுபுத்திரன் என்னும் பெயர் பெற்றவன்.
மிகுந்த ஆற்றல் வாய்ந்த உடலுடன் இணையற்ற வலிமை பொருந்திய வீரன் நீ.
தீய சிந்தனைகளை விரட்டுபவன் நீ. நல்ல சிந்தனைகளின் நண்பன் நீ.
பொன்னிறம் பொருந்தியவன் நீ, சிறந்த ஆடைகளை உடுத்தியுள்ளவன் நீ.
ஒளி வீசுகின்ற குண்டலங்களையும் காதில் அணிந்துள்ளாய்.
உனது முடியோ அலையலையாக அழகாக உள்ளது.
உனதுகைகளை இடியும் கொடியும் அலங்கரிக்கின்றன.
தோளையோ முஞ்ஜைப்புல்லாலான பூணூல் அணி செய்கிறது.
நீ சிவபெருமானின் அவதாரம், கேசரியின் மகன்,
உனது தேஜசையும் வீரத்தையும் கண்டு உலகமே உன்னை வணங்குகிறது.
அனுமனின் தந்தை கேசரி என்னும் வானரர் தலைவர்.
சிங்கத்தைப் போன்ற ஆற்றல் உடையவராக இருந்ததால் அவர் கேசரி என்னும் பெயர் பெற்றார்.
அனுமனின் தெய்வீகத் தந்தை வாயு பகவான்.நீ அறிவாளி, நற்குணங்கள் நிரம்பப் பெற்றவன்
மிகவும் கூரிய புத்தியை உடையவன்.
ஸ்ரீராமனின் பணிக்காக எப்போதும் மகிழ்ச்சியுடன் காத்திருப்பவன்.
இறைவன் திருப்புகழையும் பெருமையையும் கேட்பதில் நீ எப்போதும் பரவசம் கொள்கிறாய்.
ஸ்ரீராமனும் லட்சுமணனும் சீதையும் உனது மனத்தில் குடியிருக்கின்றனர்.
நீ மிகவும் நுண்ணிய உருவில் சீதையின் முன் வெளிப்பட்டாய்,
மிகவும் பயங்கர உருக்கொண்டு இலங்கையைக் கொளுத்தினாய்.
மிகவும் பெரிய உருவம் கொண்டு அரக்கர்களை அழித்து ஸ்ரீராமகாரியத்தை நிறைவேற்றினாய்.
சஞ்சீவினி மூலிகையைக் கொண்டு வந்து லட்சுமணனின் உயிரைக் காத்தபோது,
ஸ்ரீராமன் உன்னை எத்தனை ஆனந்தத்துடன் தழுவிக் கொண்டார்!
ஸ்ரீராமன் உனது பெருமைகளை மிகவும் புகழ்ந்து,
நீயும் பரதனைப் போலவே நமக்குப் பிரியமானவன் என்று கூறியருளினார்.
ஆயிரம் தலைகள் கொண்ட ஆதிசேஷன் கூட உனது பெருமைகளைப் புகழ்வதாக,
ஸ்ரீராமன் உன்னை அணைத்தபடியே கூறினார்.
ஸனகர் முதலான முனிவர்கள், பிரம்மா போன்ற தேவர்கள்,
சிவபெருமான், நாரதர், கலைமகள், ஆதிசேஷன், எமன், குபேரன்,
திரைக் காவலர்கள், கவிஞர்கள், புலவர்கள், எல்லோரும்
உனது பெருமைகளை விளக்க முயன்று தோல்வியே கண்டார்கள்.
ஸ்ரீராமனிடம் அறிமுகப்படுத்தி, சொந்த அரசை மீட்டுக் கொடுத்ததன் மூலம்
நீ சுக்ரீவனுக்கு ஓர் இணையற்ற உதவியைச் செய்து விட்டாய்.
உனது அறிவுரைகளின் படி நடந்ததாலேயே விபீஷணன்,
இலங்கை அரசனானான் என்பது உலகம் முழுவதும் தெரிந்த விஷயம்.
பதினாறாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்த சூரியனை, கனியென எண்ணி நீ விழுங்கி விட்டாய்.
ஸ்ரீராமனின் முத்திரை மோதிரத்தை வாயில் தாங்கியபடியே நீ கடலை கடந்துவிட்டாய்.
(உனது அளப்பரிய ஆற்றல்களைக் கணக்கிடும் போது) இது ஒன்றும் வியப்பிற்குரியதல்ல.
எத்தனைக் கடினமான செயலும் உனதருளால் எளிதில் நிறைவேறி விடும்.
ஸ்ரீராம ராஜ்யத்தின் வாயிற் காவலன் நீ. உனது அனுமதியின்றி,
அங்கு யாரும் நுழைய முடியாது.உன்னைச் சரணடைபவர்கள்
எல்லா இன்பங்களையும் பெறுகின்றார்கள்.
நீ பாதுகாவலனாக இருக்கும் போது எதற்காகப் பயப்பட வேண்டும்.
உனது ஆற்றலைக் கட்டுபடுத்த உன்னால் மட்டுமே முடியும்.
உனது ஆற்றிலின் முன் மூன்று உலகங்களும் நடுங்குகின்றன.
மகாவீரன் என்னும் உனது திருநாமத்தை இடைவிடாது கூறினால் நோய் அகல்கிறது.
துன்பம் விலகுகிறது. மனம், வாக்கு, செயலால் அனுமனைத் தியானிக்கும் ஒருவனை,
அவர் எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுவிக்கிறார்.
தவம் புரிகின்ற பக்தர்களின் மேலான ஆசைகளை நிறைவேற்றுகின்ற,
ஸ்ரீராமனின் பணிகளை நீ நிறைவேற்றினாய்.
மேலும் பக்தனின் ஆசைகளை நிறைவேறுவதுடன்,
அவன் அழியாக்கனியாகிய இறையனுபூதியையும் பெறுகிறான்.
க்ருத (சத்திய), திரேதா, துவாபர, கலி என்னும்
நான்கு யுகங்களிலும் உனது பெருமை போற்றப்படுகிறது.
உனது திருநாமம் உலகம் முழுவதும் சிறக்கிறது.
நல்லோரையும் ஞானியரையும் நீயே காக்கிறாய்.
ராமனின் மனத்துக்கு உகந்தவனான நீயே தீய சக்திகளை அழிக்கிறாய்.
எட்டுவித சித்திகளையும் ஒன்பது விதச் செல்வங்களையும் கேட்பவருக்கு அளிக்கும் ஆற்றலை சீதாதேவி உனக்கு அருளினாள்.
எட்டுவித சித்திகள்:
1. அணிமா - அணு போலாதல் 2. மஹிமா - எல்லையற்று எடை உடையவராதல் 3. கரிமா - எல்லையற்ற எடை உடையவராதல் 4. லகிமா - எடையே இல்லாது போலாதல் 5. ப்ராப்தி- நினைத்த இடத்திற்குச் செல்ல முடிதல் 6. ப்ரகாம்யம் - விரும்பியது கைகூடல் 7. ஈசித்வம் - இறைவனைப் போலாதல், 8. வசித்வம் - அனைவரையும் அடக்கி ஆளுதல்.
ஒன்பது விதச் செல்வங்கள் ஒன்பது வகை பக்தியைக் குறிக்கிறது,
ஸ்ரீராமபக்தி என்பதன் சாரமே உன்னிடம் உள்ளது. எப்போதும் நீ அவரது சேவகனாகவே இருப்பாய்.
உன்னிடம் பக்தி கொள்வதால் ஒருவன் ராமனை அடைகிறான். எத்தனையோ பிறவிகளில் தொடர்ந்து வந்த துன்பங்கள் அவனை விட்டு அகல்கின்றன.
அவன் தன் வாழ்வின் முடிவில் ஸ்ரீராமனின் உறைவிடம் செல்கிறான். அங்கு அவன் ஹரிபக்தனாக மதிக்கப்படுகிறான்.
அனுமனைத் தவிர வேறு எந்த தெய்வத்திடமும் மனத்தைச் செலுத்தாத ஒருவனுக்கும் எல்லா இன்பங்களும் நிறைகின்றன.
எல்லாம் வல்ல ஆஞ்சநேயரை நினைப்பவரின் துன்பங்களும் துயரங்களும் விலகி ஓடுகின்றன.
ஓ ஆஞ்சநேயா, உனக்கு வெற்றி, வெற்றி, வெற்றி, உண்டாகட்டும். ஓ பரமகுருவே, எங்களுக்கு அருள் புரிவீர்களாக.
இந்தத் துதிகளை நூறு முறை பக்தியுடன் படிப்பவர்களுக்கு உலகத்தடைகள் எல்லாம் நீங்கப் பெற்று பரமானந்தத்தை அனுபவிக்கின்றனர்.
இந்த ஹனுமான் சாலீஸாவைப் படிப்பவர்களுக்கு சிவபெருமான் அருள்புரிகிறாய். அவன் பரிபூரண நிலையை அடைகின்றனர். என்றென்றும் தம் இதயத்தில் இறைவன் எழுந்தருளி வாழட்டும் என்று அவரது நித்தியசேவகனான துளஸிதாசன் பிரார்த்திக்கிறான். துன்பங்களைப் போக்குபவனுக்கு மங்கள உருவினனும் தேவர்களின் தலைவனும் வாயுமைந்தனும் ஆகிய ஸ்ரீஆஞ்சநேயர் எனது இதயத்தில் ஸ்ரீராமலட்சுமண சீதையுடன் நிலவட்டும்.
இவ்வளவு சிறப்புமிக்க, பெருமை மிக்க ஆஞ்சேனயரை ஒவ்வொறு நொடியும் மனதார நினைக்க வாழ்வில் எவ்வித குறையும் இன்றி வளமோடும் புகழோடும் வாழ்வோம்.