மாந்தீஸ்வரர் பூஜைக்கு திரண்ட பக்தர்கள் சாலையில் நிறுத்தும் கார்களால் அவதி
திருவாலங்காடு: திருவாலங்காடில் மாந்தீஸ்வரர் பரிகார பூஜைக்கு வரும் பக்தர்கள், 16 கால் மண்டபம், சன்னிதி தெரு, தெற்குமாட வீதியில் தங்கள் கார்களை நிறுத்துவதால், உள்ளூர் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இக்கோவிலில், 2010ம் ஆண்டு முதல் சனிக்கிழமை தோறும் மாந்தீஸ்வரர் பரிகார பூஜை நடைபெற்று வருகிறது. இந்த பூஜையில், காலை 6-:00 மணி –-- மதியம் 12:00 மணி வரை, மூன்று குழுக்களாக 200 பக்தர்கள் பூஜையில் பங்கேற்று வருகின்றனர்.
இதற்கு கட்டணமாக, 1,600 ரூபாயை கோவில் நிர்வாகம் நிர்ணயித்துள்ளது. பெரும்பாலான பக்தர்கள் வெளியூர்களில் இருந்து கார்களில் வருகின்றனர். அவர்கள் தங்கள் காரை சன்னிதி தெரு, 16 கால் மண்டபம் மற்றும் தெற்கு மாட வீதி, வடக்கு மாட வீதியில் நிறுத்தி செல்கின்றனர்.
சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் காரால், உள்ளூர் மக்கள் சென்று வர முடியாமல் அவதியடைகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, ‘பார்க்கிங்’ வசதி ஏற்படுத்த வேண்டும் என, உள்ளூர் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.