புத்தருக்கு பொங்கல் விழா!
விழுப்புரம்: விழுப்புரம் தென்பெண்ணை ஆற்றில் புத்தர் சிலைக்கு போதி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழுப்புரம் அடுத்த பிடாகம் தென்பெண்ணை ஆற்றில் நேற்று ஆற்று திருவிழா நடந்தது. இதை யொட்டி சுவாமிகள் பல ஆலயங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு அங்கு வழிபாடுகள் நடந்தது. பவுத்தம், சமண வரலாற்றை நினைவு கூறும் வகையில் இந்த ஆற்றில் உள்ள புத்தர் சிலைக்கு போதி பண்பாட்டு மையம், மெய்யறிவு கூடல் இணைந்து போதி பொங்கல் திருவிழா நடந்தது. ஐந்தொழுக்க பஞ்சசீலங்களை கருத்தில் கொண்டு, 5 பானைகளில் பொங்கல் வைத்து புத்தருக்கு வழிபாடு நடந்தது. திருக்குறள், ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் உள்ளிட்ட இலக்கிய பாடல்களை மைய நிர்வாகிகள் பாடினர். இதில், போதி பண்பாட்டு மைய நிறுவனர் சிந்தனை செல்வன், உறுப்பினர்கள் தமிழேந்தி, இளங்கோவன், பகலவன், காசிலிங்கம், சின்னதம்பி, அரசு, பாலா கலந்து கொண்டனர்.