முதுகினால் தேரை இழுத்து செல்லும் அய்யலூர் பூசாரி!
வடமதுரை : அய்யலூர் கோயில் பூசாரி முதுகினால் தேரை இழுத்தபடி பழநிக்கு புறப்பட்டு சென்றார்.
அய்யலூர் தீத்தாகிழவனூர் பேசும்பழனியாண்டவர் கோயிலில் தைப்பூச விழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அக்கினிசட்டி, பூக்குழி இறங்குதல் போன்ற நேர்த்திக்கடன் வழிபாடுகள் நடந்தன. தைப்பூசத்தை முன்னிட்டு, இக்கோயிலில் இருந்து ஆண்டுதோறும் பெரிய முருகன் கோயில்களுக்கு நூற்றுக்கணக்கில் பக்தர்கள் பாதயாத்திரையாக செல்வர். தற்போது 50வது ஆண்டாக பூசாரி வெங்கடேசன் முதுகில் அலகு குத்தி, பழநிக்கு தேர் இழுத்து சென்றார். அவருடன் ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக சென்றனர்.
இவர்கள் எரியோடு, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் வழியே பிப்.7ல் பழநி சென்றடைவர். இதுதவிர நேர்த்திக்கடனுக்காக 7 பக்தர்கள் சிறிய ரக தேர்களை முதுகில் அலகு குத்தி அய்யலூர் கடைவீதியை வலம் வந்தனர். இவர்களுடன் சிலர் 18 அடி நீள அலகை (வேல் கம்பி) வாயில் குத்தியபடி அய்யலூரை வலம் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.