செஞ்சி தைப்பூச விழா!
செஞ்சி: செஞ்சி பி. ஏரிக்கரை வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோவிலில் தைப்பூச விழா நடந்தது. விநாயகர், சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்தனர். சக்திவேல் அபிஷேகம், இரவு 8 மணிக்கு சிறப்பு வழிபாடு, அர்ச்சனை, மகா தீபாராதனையும் நடந்தது.
சரவணாபுரம்: சிறுனாம்பூண்டி ஊராட்சி சரவணாபுரம் சிவசுப்பிரமணியர் கோவிலில் தைப்பூச விழா நடந்தது. 2ம் தேதி இரவு சக்தி கரகம் ஜோடித்து வீதியுலா நடந்தது. 3ம் தேதி காலை 10.30 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாணம், காலை 11 மணிக்கு அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் சக்திவேல் எடுத்தல், செடல் சுற்றுதல், காவடி ஆட்டம், மிளகாய் பொடி அபிஷேகம், மாவு இடித்தல், தீ மிதித்தல், தேர் இழுத்தல் செய்து நேர்த்திகடன் செலுத்தினர். முக்குணம் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்தனர். மகா தீபாராதனை, சுவாமி ஊர்வலமும் நடந்தது.
தேவனூர்: மேல்மலையனூர் ஒன்றியம் தேவனூர் பாலமுருகன் கோவிலில் தைப்பூச விழா நடந்தது. காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது. பக்தர்கள் அலகு குத்தி, காவடி எடுத்து, முதுகில் கொக்கி அணிந்து தேர் இழுத்து நேர்த்தி கடனை செலுத்தினர். சிறுதலைப்பூண்டி, கடலி, மேல்வைலாமூர், தாதிகுளம் கிராமங்களில் தைப்பூச விழா நடந்தது.