பழநி செல்லும் பக்தர்களை பாதுகாக்க ஒளிரும் ஸ்டிக்கர்!
கோவை : பழனி செல்லும் பக்தர்களைப் பாதுகாக்கும் வகையில், ஊர்க்காவல் படை சார்பில்,
பயணிகளின் ஆடைகளில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.
தைப்பூசத்தை முன்னிட்டு, ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், பாதயாத்திரையாக பழநிமலை முருகன் கோவிலுக்குச் செல்கின்றனர். இரவு நேரங்களில், சாலைகளில் வெளிச்சமில்லாத பகுதிகளில் இவர்கள் நடந்து செல்லும்போது, வாகனங்கள் மோதி, பலர் உயிரிழக்கின்றனர்; பலர் படுகாயமடைகின்றனர். இதனைத் தவிர்ப்பதற்காக, சாலையோரங்களில் தனியாக நடைபாதை அமைக்கும் முயற்சி நடந்து வருகிறது.
இருளான பகுதிகளில், தங்கள் மீது வாகனங்கள் மோதாமலிருப்பதற்காக, டார்ச் லைட், ஒளிரும் விளக்குகள் போன்றவற்றை பக்தர்கள் எடுத்துச் செல்வது வழக்கமாகவுள்ளது. ஆனால், இது எல்லோருக்கும் சாத்தியமாக இருப்பதில்லை. இதனால், பக்தர்களை விபத்துக்களிலிருந்து பாதுகாக்க, பக்தர்களின் ஆடைகளில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணியை, ஊர்க்காவல் படையினர் செய்து வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் ரோட்டில், பழநி பாதயாத்திரை மேற்கொள்ளும் பல நுாறு பக்தர்களுக்கு, கோவை ஊர்க்காவல் படையின், துடியலுார் மற்றும் மேட்டுப்பாளையம் அலகுகளின் சார்பில், இந்த ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. ஊர்க்காவல் படையின் கோவை ஏரியா கமாண்டர் பாலாஜி ராஜூ மேற்பார்வையில், இந்த பணிகளை இவ்விரு பிரிவுகளைச் சேர்ந்த ஊர்க்காவல் படையினர் மேற்கொண்டனர்.