சக்கரத்தாழ்வார் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்!
ADDED :4019 days ago
கடலூர்: கடலூர் சக்கரத்தாழ்வார் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது. கடலூர் அடுத்த அரிசிபெரியாங்குப்பம் விஜயவல்லித் தாயார் சமேத சக்கரத்தாழ்வார் கோவிலில், விஜயவல்லித் தாயாருக்கு 11ம் ஆண்டு திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடந்தது. இதனையொட்டி அன்று காலை மூலவர் விஜயவல்லித் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மாலையில் மாப்பிள்ளை, பெண் வீட்டார் சீர் கொண்டு வருதல், பெருமாள், தாயார் உள்புறப்பாடு நடந்தது. தொடர்ந்து மாலை மாற்று வைபவம், பூப்பந்து விளையாட்டு, ஊஞ்சல் சேர்த்தி சேவை, காப்புக் கட்டுதல், பட்டு வேட்டி, கூரை சேலை சமர்ப்பித்து பெருமாளுக்கும், தாயாருக்கும் திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.