திருப்பூர் பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்த மயான பூஜை
திருப்பூர் : திருப்பூர் முத்தணம்பாளையம் அங்காளம்மன் கோவிலில் நடந்த சிவராத்திரி விழா, மயான பூஜையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திருப்பூர், முத்தணம்பாளையத்தில், ஆயிரம் ஆண்டு பழமையான அங்காளம்மன் கோவில் உள்ளது. சிவராத்திரி விழாவை முன்னிட்டு, மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட அக்னி தீர்த்தத்தால் அபிஷேகம் நடந்தது.நேற்று பக்தர்கள் முன்னிலையில் மயான பூஜை நடந்தது. கோவில் அருகே உள்ள மயானத்தில், எலும்பு, மண்டை ஓடுகளால், மயான ருத்ரி ரூபத்தில் அம்மன் காணப்பட்டார். வல்லான கண்டனை சம்ஹாரம் செய்தார். கோவில் அருளாளிகள், மண்டை ஓடு, எலும்புகளை ஏந்தி, ஆக்ரோஷமாக ஆடினர். வல்லான கண்டனின், குதிரை, யானை, காலாட்படைகளை அழிக்கும் வகையில், கோழி, ஆடு, பன்றி பலி கொடுக்கப்பட்டன. அவற்றின் ரத்தம் கலந்த உணவை அருளாளிகள் ஆவேசத்துடன் உண்ட காட்சியும், குடல்களை மாலையாக அணிந்து, சக்தி ஆடிய காட்சியும், வல்லான கண்டனை வதம் செய்யும் காட்சியும், பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தன.நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, செம்பு குடத்தில் தேங்காய் முக்கண் கீழ் நோக்கியும், தலை பகுதி மேல்நோக்கியும் வைத்து, அதில் எலுமிச்சம்பழம் வைத்து, அம்மன் சக்தி கும்பம் எழுந்தருளிய, சக்தி விந்தை அழைப்பு நடந்தது. தொடர்ந்து, கத்தியின் கூர்மையான பகுதி கும்பத்தின் மீது நேராக நிற்கும் அலகு தரிசனம் காட்சி நடந்தது. இரவு முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண் விழித்து, சுவாமி தரிசனம் செய்தனர்.