ராமகிருஷ்ணரின் 180வது ஜெயயந்தி விழா!
மதுரை: கிருஷ்ணரின் 180வது ஜெயந்தி விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு விடியற்காலை 5.00 மணி முதல் மங்கள ஆரதி, வேத பாராயணம், ஸ்ரீராமகிருஷ்ணர் கோயிலை வலம் வரும் நாம சங்கீர்த்தனம், விசேஷ பூஜைகள், பஜஜைகள், ஸ்ரீராமகிருஷ்ணரின் திருவுருவப் படத்துடன் சாரதா வித்யாலயா பள்ளி மாணவ- மாணவிகளின் ஊர்வலம், ஹோமம் ஆகியவை தொடர்ந்து நடைபெற்றன. இந்த விழாவில் மதுரை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர், தனது ஆன்மிகச் சொற்பொழிவில் பின்வருமாறு குறிப்பிட்டார். நாம் உலகில் நமக்கு உரிய எல்லாக் கடமைகளையும் செய்ய வேண்டும். ஆனால் மனதை இறைவனிடம் வைக்க வேண்டும். மனைவி மக்கள், தாய் தந்தை, உறவினர்கள் நண்பர்கள் எல்லோருடனும் சேர்ந்து வாழுங்கள். அவர்களுக்குச் சேவை செய்யுங்கள். அதே சமயத்தில், அவர்கள் உங்களுடையவர்கள் அல்ல என்பதை உள்ளத்தில் நன்றாகத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
ஒரு பணக்காரனின் வீட்டில் வேலைக்காரி ஒருத்தி வேலை செய்கிறாள். அவள் அந்த வீட்டில் எல்லா வேலைகளையும் செய்கிறாள். ஆனால் அவளது மனம் கிராமத்தில் உள்ள தன் வீட்டையே சதா நினைத்துக் கொண்டிருக்கிறது. அவள் அந்தப் பணக்காரரின் குழந்தைகளைத் தன் குழந்தைகளைப் போலவே கவனிக்கிறாள்; என் ராமன், என் ஹரி என்றெல்லாம் சீராட்டுகிறாள். இருந்தாலும், அந்தக் குழந்தைகள் தன்னுடையவர்கள் அல்ல என்பது அவளுக்கு நன்றாகத் தெரியும். ஆமை தண்ணீரில் இங்கும் அங்கும் திரிகிறது. ஆனால் அதன் மனம் எல்லாம் எங்கிருக்கும் தெரியுமா? தான் கரையில் இட்ட முட்டைகளின்மீது இருக்கும். அதுபோல் உலகில் உங்களுக்குரிய எல்லாக் கடமைகளையும் செய்யுங்கள். ஆனால் மனதை இறைவனிடம் வையுங்கள். இறைவனிடம் பக்தியை அடையாமல், உலக வாழ்க்கையில் ஈடுபட்டால் மேலும் மேலும் சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள்; ஆபத்து, துன்பம், கவலை ஆகியவை எல்லாம் வந்து மோதும்போது நீங்கள் உங்கள் மனஉறுதியை இழப்பீர்கள். அது மட்டுமல்ல- உலகியல் விஷயங்களில் உங்கள் மனம் செல்கின்ற அளவுக்கு பற்று அதிகரிக்கும்.
கைகளில் எண்ணெய் தடவிக்கொண்டு பலாப்பழத்தை வெட்ட வேண்டும். இல்லாவிட்டால் கைகளில் பிசின் ஒட்டிக் கொள்ளும். அதுபோல் பக்தி என்ற எண்ணெயைப் பூசிக்கொண்டு நீங்கள் கடமைகளைச் செய்ய வேண்டும். இந்த பக்தியை அடைவதற்குத் தனிமையிலிருந்து ஜபம், தியானம், பிரார்த்தனை, ஆன்மிக நூல்களைப் படித்தால் போன்றவற்றில் ஈடுபட வேண்டும். வெண்ணெய் எடுக்க வேண்டுமானால், உறையிட்ட பாலைத் தனியாக இடத்தில் வைக்க வேண்டும். பாலை அசைத்துக் கொண்டிருந்தால் தயிர் தோயாது. பிறகு எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, தயிரைக் கடைய வேண்டும். அப்போதுதான் வெண்ணெய் திரண்டு வரும். தனிமையில் அமர்ந்து, இறைசிந்தனையில் நீங்கள் ஈடுபட்டால் மனதில் ஞானம், வைராக்கியம், பக்தி முதலியவை உண்டாகிறது. ஆனால் அதே மனதை உலகியல் விஷயங்களில் ஈடுபடுத்தினால்- அதன் தரம் தாழ்ந்துவிடுகிறது. உலகியல் வாழ்க்கையில் பெண்ணாசை, பணத்தாசை பற்றிய சிந்தனை ஒன்றே இருக்கிறது.
உலக வாழ்க்கை தண்ணீர், மனமோ பால், பாலைத் தண்ணீரில் கலந்தால் அவை கலந்து ஒன்றாகிவிடும். தூய பாலைக் காண முடியாது. அதே பாலைத் தயிராக்கி, வெண்ணெய் எடுத்து, அந்த வெண்ணெயைத் தண்ணீரில் இட்டால்- அது ஒட்டாமல் மிதக்கும். எனவே தனிமையில் ஆன்மிக சாதனைகள் செய்து, முதலில் ஞானம், பக்தி என்னும் வெண்ணெயைப் பெறுங்கள். அந்த வெண்ணெயை இல்லற வாழ்க்கை என்னும் நீரில் இட்டால் அது நீருடன் கலக்காது - மிதக்கும். அத்துடன் விவேகத்தால் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இவ்விதம் ஆராய்ந்து பார்ப்பது மிகவும் அவசியம். பெண்- பணம் போன்றவை நிலையற்றவை, இறைவன் ஒருவர் மட்டுமே நிலையானவர். பணத்தால் என்ன கிடைக்கும்? தங்குவதற்கும் இடம் கிடைக்கும், அவ்வளவுதான்; இறைவன் கிடைக்கமாட்டார். எனவே பணம் ஒருபோதும் வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்க முடியாது. இப்படிச் சிந்திப்பதுதான் ஆராய்ச்சி. இவ்வாறு தன் சொற்பொழிவில் கூறினார்.
விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பகலுணவு பிரசாதம் வழங்கப்பட்டது. பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் பிறந்தநாளை முன்னிட்டு, ஸ்ரீராமகிருஷ்ண மடம் புக் ஸ்டாலில் புத்தகங்கள் 25% தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டன.