உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில் திருவிழா: பறவைக்காவடி எடுத்து வழிபாடு!

மாரியம்மன் கோவில் திருவிழா: பறவைக்காவடி எடுத்து வழிபாடு!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி, பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து அம்மனை வழிபட்டனர்.  பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த மாதம், 17ம் தேதி திருவிழா சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, 24ம் தேதி இரவு, 11:00 மணிக்கு கம்பம் நடுதல் நிகழ்ச்சியும் நடந்தது. இதனையடுத்து, பெண்கள் கம்பத்திற்கு மஞ்சள் நீர் ஊற்றி வழிபாடு செய்து வருகின்றனர்.  மேலும், விழாவையொட்டி கோவில்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் தினசரி சிறப்பு பூஜைகளும் நடந்து  வருகின்றன. தொடர்ந்து நேற்றுமுன்தினம் காலை, 10:30 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.   இதன் தொடர்ச்சியாக, கடந்த, 6ம் தேதி முதல் பக்தர்கள் நேர்த்திக்கடனை நிவர்த்தி செய்ய, பூவோடு ஏந்தி வழிபாடு செய்து வருகின்றனர்.  இரண்டாம் நாளான நேற்றுமுன்தினம் பத்ரகாளியம்மன் கோவில்வீதி, ஜோதிநகர், சீனிவாசபுரம், கண்ணப்பன்நகர், குமரன் நகர் மற்றும் மார்க்கெட் ரோடு பகுதி பக்தர்கள் பூவோடு எடுத்தனர். இதில், மார்க்கெட் ரோடு பகுதியிலிருந்து பக்தர்கள் நான்கு அடி நீளமுள்ள பறவைக்காவடி ஏந்தியும், அலகு குத்தியும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.  பக்தர்கள் அந்தரத்தில் தொங்கியபடி, பறவைக்காவடி எடுத்து, ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இந்த நிகழ்ச்சியையொட்டி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !