திருச்சுழி கோயில் தேரோட்டம்; பக்தர்கள் பரவசம்!
ADDED :3840 days ago
திருச்சுழி: திருச்சுழி திருமேனிநாத சுவாமி கோயில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருச்சுழி துணைமாலை நாயகி திருமேனிநாத சுவாமி கோயில் பங்குனி விழா கடந்த மார்ச் 25ல் துவங்கி 10 நாட்களாக நடந்து வருகிறது.
தினமும் சுவாமி பல்வேறு வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது. ஒன்பதாம் நாள் விழாவான நேற்று தேரோட்டம் நடந்தது. பிரியாவிடையுடன் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் முக்கிய வீதிகள் வழியாக தேரில் பவனி வர தேரோட்டம் நடந்தது. ராமநாதபுரம் சமஸ்தானம் திவான் மகேந்திரன் வடம் பிடித்து துவக்கி வைத்தார் டி.எஸ்.பி., சிவக்குமார், இன்ஸ்பெக்டர்கள் முத்து, செல்வம், ஊராட்சி தலைவர் பாஸ்கரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் கணேசன் செய்திருந்தார்.