நார்த்தாமலை முத்துமாரியம்மன் தேர் திருவிழா கோலாகலம்!
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பங்குனித் திருவிழாவையொட்டி, கடந்த, 22ம் தேதி இரவு பூச்சொரிதல் விழா நடைபெற்றது, 29ம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனித்திருவிழா தொடங்கியது. தொடர்ந்து, 7ம் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் உபயதாரர்களின் மண்டகப்படியும், அன்னவாகனம், ரிஷபவாகனம், சிம்மவாகனம், குதிரை வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக, நேற்று தேரோட்டம் நடைபெற்றது.அதிகாலை முதலே அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. பிற்பகல், ஒரு மணிக்கு அம்மனுக்கு ராஜ அலங்காரமும், தீபாராதனையும் நடந்தது. மாலை, 3 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
மாரியம்மன் மஞ்சள் பட்டுடன், ராஜ அலங்காரத்தில் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை, 4.30 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது. தேர் திருவிழாவை முன்னிட்டு, நார்த்தாமலை மட்டுமின்றி புதுக்கோட்டை புதிய பஸ் ஸ்டான்ட், பழைய பஸ் ஸ்டான்ட், திலகர்திடல், திருக்கோகர்ணம், திருவப்பூர், மச்சுவாடி, பிருந்தாவனம் உள்ளிட்ட பகுதிகளில் ரோட்டரி சங்கம், ஜேசீஸ், வாடகை வாகன ஓட்டுனர்கள் சங்கம், ஆட்டோ ஓட்டுனர் சங்கம், லாரி ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தன்னார்வ மற்றும் ஆன்மீக அமைப்புகளின் சார்பில், பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், மோர், சர்பத் போன்றவை வழங்கப்பட்டது.மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து, பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலுக்கு பாத யாத்திரை சென்றனர். தேர் திருவிழாவையொட்டி, புதுக்கோட்டை மாவட்டத்துக்கு நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி, கீரனூர், இலுப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, நார்த்தாமலைக்கு சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டிருந்தது. எஸ்.பி., உமா தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.