உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரபாண்டியில் அம்மனுக்கு ஓர் ஆலயம்!

வீரபாண்டியில் அம்மனுக்கு ஓர் ஆலயம்!

தேனி: தேனி மாவட்டம்,வீரபாண்டியில் ஆதிகாலத்தில் ஒரு அசுரனை வெல்வதற்காக உமாதேவி அம்சம் பெற்ற கவுமாரியம்மன் இன்றைய தலம் இருக்கும் அடர்ந்த வனத்தில் தவமியற்றினார். அசுரன் கவுமாரியை துõக்கிச் செல்ல முயன்றான். இதனை அறிந்த கவுமாரி, பக்கத்தில் இருந்த அருகம்புல்லை எடுத்து அசுரன் மீது வீச அசுரனை இரு கூறாக பிரித்து அழித்தார். அப்போது தேவர்கள் மலர்மாறி துõவ கவுமாரி இங்கேயே கன்னித்தெய்வமானார். அவர் வழிபட்ட சிவலிங்கத்திற்கு திருக்கண்ணீஸ்வரர் என பெயர் இட்டார். வீரபாண்டிய மன்னன் மதுரையில் ஆட்சி நடத்திய போது, ஊழ்வினையால் இரண்டு கண்களும் ஒளி இழக்க நேரிட்டது.  மன்னன் இறைவனை வேண்டினான். இறைவனும் அவன் கனவில் தோன்றி இன்றைய வீரபாண்டி தலங்கள் இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டி, நீ வைகை கரை ஓரமாக சென்று நிம்பா ஆரணியத்தில் உமாதேவி அம்சம் பெற்ற கவுமாரி தவமியற்றுகிறாள். அங்கு சென்று அவளை வணங்கு, உன் கண்கள் இருள் நீங்கி ஒளி பெரும் எனக்கூறி அருளினார். அதேபோல் கவுமாரியை வணங்கிய வீரபாண்டிய மன்னர் ஒரு கண்ணையும், கவுமாரி கட்டளைப்படி திருக்கண்ணீஸ்வரமுடையாரை வணங்கிய மன்னன் மறு கண்ணையும் பெற்றார். பார்வை பெற்ற மன்னன் கண்ணீஸ்வரருக்கு கற்கோயில் அமைத்து வழிபாடு செய்தான். அதுவே வீரபாண்டி என அழைக்கப்பெற்றது. பிற்காலத்தில் வீரபாண்டியை தலைமையிடமாக கொண்டு வீரபாண்டிய மன்னனின் பேரன் ராசசிங்கன் வீரபாண்டி வட்டத்தை ஆட்சி நடத்தினான். அப்போது முதல் கண்நோய் கண்டவர்கள், அம்மை நோய் கண்டவர்கள், தீராத நோய் கண்டவர்கள் என அனைத்து தரப்பினரும் அம்மனை தரிசித்து தீர்த்தமும், அருளும் பெற்று விமோசனம் அடைந்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !