பத்ரகாளியம்மன் சிலையிலிருந்து உடுக்கை சத்தம்?: பரபரப்பு!
ADDED :4064 days ago
பண்ருட்டி: பண்ருட்டி அருகே, ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவிலில் உடுக்கை சத்தம் கேட்பதாக, பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு நிலவியது. பண்ருட்டி அடுத்த சீரங்குப்பம் கெடிலம் ஆற்றங்கரையில் உள்ள ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம், ஓர் ஆண்டுக்கு முன் நடந்தது. இங்கு, 21 அடி உயரத்தில், 10 கைகளை கொண்ட பத்ரகாளியம்மன் சிலை உள்ளது. பிற்பகல் 11:30 மணியிலிருந்து, 12:00 மணிக்குள், 21 அடி உயரமுள்ள பத்ரகாளியம்மன் கையில் உள்ள உடுக்கையில் இருந்து உடுக்கை சத்தம் கேட்பதாகக் கூறி, அப்பகுதி மக்கள், கடந்த ஒரு மாதமாக, தினமும் 12:00 மணிக்கு, கோவிலில் கூடுகின்றனர். நேற்றும், அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் திரண்டனர். உடுக்கை சத்தம் கேட்பதாக, பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.