காயாரோகணீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா கோலாகலம்!
ADDED :3803 days ago
காஞ்சிபுரம்: பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ள குரு கோவிலில், குரு பெயர்ச்சி விழா, நேற்று கோலாகலமாக நடைபெற்றது. காஞ்சிபுரம், காயாரோகணீஸ்வரர் கோவிலில், குருவிற்கு தனி சன்னிதி உள்ளது. இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில், ஆண்டுதோறும் குரு பெயர்ச்சி விழா, வெகு விமரிசையாக நடைபெறும். நேற்று முன்தினம் இரவு, கடக ராசியில் இருந்து, சிம்ம ராசிக்கு குரு இடம் பெயர்ச்சி அடைந்தார். இதை முன்னிட்டு, நேற்று காலை, 6:00 மணியளவில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், அதை தொடர்ந்து, 12:00 மணியளவில், மூலவர் சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். நேற்று காலை முதல், இரவு 7:00 மணி வரை லட்சார்ச்சனை நடைபெற்றது. உற்சவர் குரு பகவான் சிறப்பு அலங்காரத்தில், யானை வாகனத்தில் அமர்ந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.