உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது ஓங்கல்லூர் தளி மகாதேவர் கோவில்

தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது ஓங்கல்லூர் தளி மகாதேவர் கோவில்

பாலக்காடு; பட்டாம்பி அருகே உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஓங்கல்லூர் மஞ்சளுங்கல் தளி மகாதேவர் கோவில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி அருகே உள்ள பகுதி ஓங்கல்லூர். இங்குள்ள மஞ்சளுங்கல் தளி மகாதேவர் கோவிலின் அபூர்வ சிற்ப வேலைப்பாடுகள் மற்றும் பழமை மாறாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அறங்காவலர் குழு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது இதை ஏற்ற மத்திய அரசு கோவிலில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான இறுதி அறிவிப்பாணையை மத்திய கலாச்சார அமைச்சகம் வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து, இக்கோவில் இனி மத்திய தொல்லியல் துறையின் நேரடி பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்படுகிறது.


​கடந்த 2025 ஜூலை மாதம் இக்கோவிலைத் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிப்பதற்கான வரைவு அறிக்கை வெளியிடப்பட்டது. பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு, 2026 ஜன. 30ம் தேதி மத்திய கலாச்சார அமைச்சகம் இதற்கான இறுதிப் பூர்வமான உத்தரவைப் பிறப்பித்தது. 1958-ம் ஆண்டின் பழங்கால நினைவுச் சின்னங்கள் சட்டத்தின் கீழ் இந்த உயரிய அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ​​நேற்று காலை, இந்தியத் தொல்லியல் துறையின் தெற்கு மண்டல இயக்குனர் டாக்டர் நவரத்ன குமார் பாக் மற்றும் கேரள கண்காணிப்பாளர் விஜயன் நாயர் தலைமையிலான 12 பேர் கொண்ட உயர் மட்டக் குழுவினர் கோவிலுக்கு வருகை தந்தனர். கோவிலைப் பொறுப்பேற்றுக் கொள்வதற்கான அதிகாரப்பூர்வ ஆவணங்களை அவர்கள் கோவில் கமிட்டியிடம் ஒப்படைத்தனர். இந்நிகழ்வின் போது கோவில் தந்திரிகள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உடனிருந்தனர்.


​​தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியதாவது: முதற்கட்டமாக கோவில் வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு வேலிகள் மற்றும் எல்லைச் சுவர்கள் அமைக்கப்படும். ​பழமை மாறாத வகையில் பராமரிப்புப் பணிகள் தொல்லியல் துறை நிபுணர்களால் மேற்கொள்ளப்படும். ​ 4ம் தேதி திருச்சூர் அலுவலகத்தில் இது குறித்த விரிவான ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !