அகத்தீஸ்வரர் கோவிலில் ஆனி அமாவாசை நிகும்பலா யாகம்!
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ அகத்தீஸ்வரர் சமேத பிரத்தியேங்கராதேவி அம்மன் கோவிலில் ஆனி மாத அமாவாசை சிறப்பு யாகம் நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா, பாதூர் ஸ்ரீஅகத்தீஸ்வரர் சமேத பிரத்தியேங்கராதேவி அம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு யாகம் நேற்று காலை 10:30 மணிக்கு நடந்தது. யாக குண்டத்தில் பழ வகைகள், நெய் ஊற்றப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது. பின்னர் கோவில் பரம்பரை அறங்காவலர் அருணாச்சல குருக்கள் தலைமையில், 5 குருக்கள் வேத மந்திரங்கள் முழங்க யாக குண்டத்தில் மிளகாய் வற்றல் மற்றும் பக்தர்கள் த ங்களது வேண்டுதல் நிறைவேற்ற கோரி வெற்றிலைகளை செலுத்தி யாகம் நடந்தது. அதனை தொடர்ந்து பல்வேறு பழ வகைகள், பால், தயிர், நெய் ஆகியவற்றால் யாகம் நடத்தப்பட்டது. ஸ்ரீ பிரத்தியேங்கராதேவி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.