பழநியில் ஆடி லட்சார்ச்சனை சிறப்பு யாகம்: ஆக.14ல் வெள்ளித்தேர்!
பழநி: உலக நலன்வேண்டி பழநி பெரியநாயகிம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனை சிறப்பு யாகம் நடந்தது. ஆக.,14ல் வெள்ளித்தேரோட்டம் நடக்கிறது. பெரியநாயகியம்மன்கோயிலில் ஆடி லட்சார்ச்சனை விழா ஜூலை 17ல் துவங்கி ஆக.,14 வரை நடக்கிறது. தினமும் மாலை 6.30 மணிக்கு மேல் மலர்களால் சிறப்பு லட்சார்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று ஆடி லட்சார்ச்சனை வேள்வியில் புனிதநீர் நிரம்பிய கலசங்கள் வைத்து, கணபதி ஹோமம், 1008 சகஸ்ர நாமம் உள்ளிட்ட லட்சார்ச்சனை நடந்தது. சீப்பு, கண்ணாடி, மஞ்சள் கயிறு பொருட்கள் வைத்து சுமங்கலி பூஜை செய்து 108 பெண்களுக்கு வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆடி வெள்ளியன்று அம்மன் ஆபரணாதி, முத்தங்கி, சந்தனகாப்பு, மீனாட்சி போன்ற அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆக.,14 ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு மகாஅபிஷேகமும், அம்மனுக்கு தங்கக்கவசம் அலங்காரமும் செய்யப்படுகிறது. அன்று இரவு 8.30 மணிக்குமேல் பெரியநாயகி அம்மன்கோயில் நான்குரத வீதிகளில் வெள்ளித் தேரோட்டம் நடக்கிறது.