மோகனூர் பாலதண்டாயுதபாணி கும்பாபிஷேக விழா
மோகனூர்: மோகனூர் அடுத்த, என்.புதுப்பட்டியில், மிகுந்த பொருட்செலவில் பாலதண்டாயுதபாணி கோவில் திருப்பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மேற்கொள்ளப்பட்டது. பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில், நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு, கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, தீபாராதனை, பிரசாதம்வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. மேலும், சாந்தி ஹோமம், அக்னி ஸங்க்ரஹணம், தீர்த்தக்குடம் ஊர்வலம், யாகசாலை அலங்காரம், புண்யாஹவாசனம், ரஷாபந்தனம், கும்பாலங்காரம், முதற்கால யாகபூஜை, தீபாராதனையும் நடந்தது. நேற்று முன்தினம், இரண்டாம் காலயாக பூஜை, பிரசாதம் வழங்குதல், மூன்றாம் காலயாக பூஜை, பூர்ணாகுதி நடந்தது. நேற்று காலை, 7.35 மணிக்கு, நாடி சந்தானம், கலசங்கங்கள் புறப்பாடு நடந்தது. அதையடுத்து, காலை, 9.35 மணிக்கு, பாலதண்டாயுதபாணி விமானம் மற்றும் பரிவார விமானங்களுக்கு கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. தொடர்ந்து, மகா அபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.