எனக்கென்ன தெரியும்?
ADDED :3810 days ago
இலங்கையில் சீதையைத் தேடியலைந்தார் ஆஞ்சநேயர். அவரைக் கண்ட இலங்கை காவல் தெய்வம் லங்கிணி, ஏ! குரங்கே! புதிதாகத் தென்படும் நீ யார்? என்று கேட்டது. ஆஞ்சநேயர் பொய்யாக, இந்த வனப்பகுதி அழகாக இருக்கிறது. அதைச் சுற்றிப் பார்க்கவே வந்தேன், என்றார். இதே போல, ஆஞ்சநேயருக்காக, சீதையும் ஒருமுறை பொய் சொல்ல நேர்ந்தது. ஆஞ்சநேயர் அசோகவனத்தை அழித்து துவம்சம் செய்த போது, அரக்கிகள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். அதில் ஒருத்தி சீதையிடம், இவன் யார்? எனக் கேட்டாள். சீதையோ, எனக்கென்ன தெரியும்? என்று உண்மையை மறைத்தாள். ஆபத்து காலத்தில் உண்மையை மறைத்து பொய் சொல்வது தர்மம் என்று சாஸ்திரமே கூறுவதால், இதை குற்றமாகக் கருதுவதில்லை.