உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நீங்களும் உண்ணுங்கள் உறவுகளுக்கும் கொடுங்கள்!

நீங்களும் உண்ணுங்கள் உறவுகளுக்கும் கொடுங்கள்!

ஹஜ்ஜூ பெருநாளன்று, பிராணிகளை அறுத்துப் பலியிடுவதே, குர்பானி என்று சொல்லப்படுகிறது. நபி இபுராஹிம் (அலை) அவர்களின், தியாகத்தை முன் மாதிரியாக கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதனைச் செய்துள்ளனர். அல்லாஹ்வும் தன் திருமறையில், இதை ஒரு வணக்கமாக அங்கீகரித்துள்ளான்.(அவைகளுக்கு நன்றி செலுத்துவதற்காக) நீங்கள் உங்களது இறைவனை தொழுது, குர்பானி (செய்து) கொடுத்து வாருங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன் 108:2) ஹஜ் பெருநாள் தினத்தில், அறுத்துப்பலியிடுவதை விடச் சிறந்த அமலை, ஒருவன் செய்து விட முடியாது. அந்தப்பிராணியிலிருந்து சிந்துகின்ற ரத்தம், அல்லாஹ்விடம் மிகவும் உயர்ந்த மதிப்பை பெற்றதாகும். அதனை சிறந்த முறையில் அறுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்:அன்னை ஆயிஷா, நுõல்: திர்மீதிமகத்தான பலி என்றால், சினம் கொண்ட கடவுளின் கோபத்தை தணிப்பதற்கு, கொடுக்கப்படும் பலி என்றோ அல்லது இந்த லாபகர உலகில், நாடியது நிறைவேற வேண்டி, கடவுளை களிப்பூட்டவோ செய்யப்பட்ட பலி அல்ல என்பது தான்.முஸ்லிம் என்றால், இறைவனுக்கு முற்றிலும் வழிபடுபவர் என்று பொருள். எனவே, இறைவனுக்கு முற்றிலும் வழிபட்ட, ஒரு உண்மை முஸ்லிமின் உலகம் போற்ற வேண்டிய உன்னத தியாகமே, இந்த மகத்தான பலியாகும். குர்பான் எனப்படுவது, புறச்சடங்குகளை மட்டும் குறிப்பிடுவது ஆகாது. உள்ளத்தில் ஏற்படும் கீழான இச்சைகளை வேரறுத்து, ஊன் உருக, உள்ளம் உருக இறைவனுக்கு முற்றிலும் வழிபடுவதையே குறிக்கும். இதை தான் இறைவன், தனது அற்புத திருமறையில் (இவ்வாறு குர்பான் செய்த போதினும்), அதன் மாமிசமோ, அதன் ரத்தமோ, இறைவனை அடைந்து விடுவதில்லை. உங்களுடைய இறையச்சமே, அவனை அடையும் என்று மிக அற்புதமாக விளக்குகின்றான்.குர்பானி கொடுக்கப்பட்ட பிராணியின் இறைச்சியை நீங்களும் உண்ணுங்கள். உறவினர்கள், ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள். சேமித்தும் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஏழைகளின் பசியைப் போக்கும், ஓர் அற்புத வணக்கமாகவும் இதை காட்டித் தந்தார்கள்.இப்ராகீம் நபியவர்களின், மாபெரும் தியாகத்தை நினைவு கூர்வது மட்டுமின்றி, தியாகத்தை நெஞ்சில் நிறுத்திட,  எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்வோம்.

குர்பானியின் இறைச்சியோ, அவற்றின் ரத்தமோ அல்லாஹ்விடம் போய் சேர்வதில்லை. எனினும் உங்களின் இறையச்சம் தான், அவனைச் சென்றடைவதாக (22;37)அல்லாஹ், தனது அருள் மறை திருக்குர்ஆனில் கூறியிருக்கிறான். அதன்படி, இறையச்சமே, இதன் பிரதான அடிப்படை நோக்கம் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். வல்ல இறைவன் நாம் கொடுக்கும் குர்பானியை, அவனுடைய பொருத்தத்திற்குரியதாக, தியாக சிந்தனையை, செயல்பூர்வமாக வெளிப்படுத்தக் கூடியதாக அமைத்து அதை அங்கீகரித்து அருள்புரிவானாக!  ஆமின்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !