உடுமலை சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு!
உடுமலை: உடுமலை மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள, சிவன் கோவில்களில், பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது. மடத்துக்குளம், கடத்துார், அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அர்ச்சுனேசுவரர் கோவிலில், பிரதோஷம் முன்னிட்டு, மாலை, 4:30 மணிக்கு, சிறப்பு பூஜை நடந்தது. கொழுமத்தில் உள்ள தாண்டேஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில்களில், நேற்று மாலை, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. உடுமலை, முத்தையா பிள்ளை லே-அவுட், சக்தி விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள, சோழீஸ்வரர் சன்னதியில், மாலை, 4:00 மணிக்கு சோழீஸ்வரருக்கும், நந்தியம்பகவானுக்கும், அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பிரதோஷ மூர்த்தி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, கோவில் பிரகாரத்தில் வீதியுலா வந்தார்.
தில்லை நகர் ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில், ரத்தின லிங்கேஸ்வரருக்கு மாலை, 4:30 மணிக்கு, பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களில், அபிஷேகம் நடந்தது. எலையமுத்துார் பிரிவில் உள்ள, புவன கணபதி கோவிலில் உள்ள சிவன் சன்னதி, ருத்ரப்பா நகரில் உள்ள பஞ்சமுக லிங்கேஸ்வரர் கோவில், பிரசன்ன விநாயகர் கோவில், சிவன் சன்னதி, பெதப்பம்பட்டி ரோடு, ஏரிப்பாளையத்தில் உள்ள சித்தாண்டீஸ்வரர் கோவில்களில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. குறிச்சிக்கோட்டை மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சிவலிங்கேஸ்வரர் சன்னதியில், சுவாமிக்கு மாலை, 4:30 மணிக்கு, சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து, அலங்கார பூஜை நடந்தது; ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.