உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவுடையம்மன் கோவில் குடமுழுக்கிற்கு 32 ஆண்டுகளாக காத்திருப்பு!

திருவுடையம்மன் கோவில் குடமுழுக்கிற்கு 32 ஆண்டுகளாக காத்திருப்பு!

மீஞ்சூர்: திருப்பணிகள் மேற்கொள்ளாமல் இருப்பதால், மேலுார் திருவுடையம்மன் கோவில் பாழடைந்து வருவதுடன், 32 ஆண்டுகளாக குடமுழுக்கு செய்யாமல் இருப்பது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மீஞ்சூர் அடுத்த, மேலுார் கிராமத்தில், திருமணங்கீஸ்வரர் – திருவுடையம்மன் கோவில் உள்ளது. செல்வம், குழந்தைப்பேறு போன்ற வேண்டுதல்களுக்காக, இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், தமிழ்நாடு சுற்றுலா துறையின் நவசக்தி கோவில்களில் ஒன்றாகவும் உள்ளது.

பணிகள் நிறுத்தம்:
இக்கோவிலில், 1983ம் ஆண்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின், 2000ம் ஆண்டு, கும்பாபிஷேக பணிகளுக்காக, இக்கோவிலில் பாலாயம் செய்யப்பட்டதுடன், பணிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில்,  2014ம் ஆண்டு, 30 லட்சம் ரூபாய் நிதியில், இக்கோவிலில் திருப்பணிகள்  துவங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது. ஆனால், இதுநாள் வரை எந்த  பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற வேண்டிய கும்பாபிஷேகம், 32  ஆண்டுகளாக நடைபெறாமல் இருப்பது, பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி  உள்ளது. தற்போது, இக்கோவில் வளாகம் புதர் மண்டியும்; சுற்றுச்சுவர் உடைந்தும்; அம்மன், ஈஸ்வரர் சன்னிதி கோபுரங்களில் செடிகள் வளர்ந்தும் உள்ளன. நவக்கிரக சன்னிதி கட்ட, துவங்கப்பட்ட கட்டட பணிகள், பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளன. இதுகுறித்து, அருள்மிகு திருவுடையம்மன் சேவா சபாவின் செயலர் சத்தியதாஸ் கூறுகையில், ‘இந்த கோவிலைபுனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான், இந்த அமைப்பை  துவங்கி உள்ளோம். திருப்பணிகளுக்கு நிதியுதவி வழங்க, சபாவில் உள்ளவர்கள் தயாராக உள்ளனர். அறநிலையத் துறையினர்தான் திருப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

தனியார் பங்களிப்பு:
இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத இந்து சமய அறநிலையத் துறை  அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பழமையான கோவில் என்பதால், தொல்லியல் துறையினர் ஆய்வு  மேற்கொண்டு, பழமை மாறாமல் புதுப்பிக்க அறிவுறுத்தி உள்ளனர். மறு மதிப்பீடு செய்து, அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம். தற்போது தனியார் பங்களிப்புடன், பணிகளை துவக்க உள்ளோம்’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !