உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் சூரசம்ஹாரம்: நான்கு சூரன்கள் வதம்!

பழநியில் சூரசம்ஹாரம்: நான்கு சூரன்கள் வதம்!

பழநி:பழநி கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, பக்தர்களின் அரோகரா சரண கோஷத்துடன், பழநி கிரிவீதிகளில் நான்கு சூரன்களின் வதம் நடந்தது. இன்று திருக்கல்யாணம் நடக்கிறது.பழநி மலைக்கோயிலில் நவ.,12ல் காப்புகட்டுதலுடன் கந்தசஷ்டி விழா துவங்கியது. நேற்று சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, மலைக்கோயில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், அதைத்தொடர்ந்து சுவாமிக்கு படையல் நைவேத்தியம் நடந்தது.பகல் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடந்தது. சின்னக் குமாரசுவாமி மலைக்கொழுந்து அம்மனிடம் பராசக்திவேல் வாங்கி கிரிவீதிக்கு புறப்பட்டதும், சன்னதி திருகாப்பிடப்பட்டது. முத்துகுமாரசுவாமி வள்ளி தெய்வானையுடன் பெரியநாயகியம்மன்கோயிலிருந்து கிரிவீதிக்கு வந்தார்.

சூரசம்ஹாரம்: அதன்பின் திருஆவினன்குடி கோயிலில் பராசக்தி வேலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கஸ்துாரி யானை முன் சென்றது. பராசக்திவேலுடன் சின்னக்குமாரசுவாமி தங்கமயில் வாகனத்தில் இரவு 7.10 மணிக்கு வடக்கு கிரிவீதியில் தாரகாசூரனை வதம் செய்தார். பின் கிழக்கு கிரிவீதியில் பானுகோபன்சூரன், தெற்குகிரிவீதியில் சிங்கமுகாசூரன், மேற்குகிரிவீதியில் சூரபத்மன் ஆகிய அசுரர்களை வதம் செய்தார். இரவு 10 மணிக்கு மேல் சின்னக்குமராசுவாமி மலைக்கோயிலுக்கு புறப்பாடாகி சம்ப்ரோட்ஷண பூஜைக்கு பின் அர்த்தஜாம பூஜை நடந்தது. திருக்கல்யாணம்: இன்று காலை 10 க்குமேல் 12 மணிக்குள் மலைக்கோயிலில் சண்முகர் வள்ளி, தெய்வானைக்கும், இரவு 6 மணிக்குமேல் 7.30 மணிக்குள் பெரியநாயகியம்மன் கோயிலில் முத்துகுமாரசுவாமி, வள்ளி, தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !