உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் டிச.27ல் மண்டல பூஜை டிச.23ல் தங்க அங்கி பவனி

சபரிமலையில் டிச.27ல் மண்டல பூஜை டிச.23ல் தங்க அங்கி பவனி

சபரிமலை: சபரிமலையில் டிச.,27-ம் தேதி மண்டலபூஜை நடக்கிறது. இதையொட்டி டிச., 23-ம் தேதி ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து தங்க அங்கி பவனி புறப்படுகிறது. கார்த்திகை 1ம் தேதி முதல் தொடர்ச்சியாக 41 நாட்கள் நடைபெறும் பூஜைகளின் நிறைவு பூஜைதான் மண்டலபூஜை. இந்த நாளில் ஐயப்பனின் விக்ரகத்தில் அணிவிக்க திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா தங்க அங்கியை காணிக்கையாக வழங்கினார். இது மண்டலபூஜைக்கு முந்தைய நாளிலும், மண்டலபூஜை நாளிலும் ஐயப்பன் சிலையில் அணிவிக்கப்பட்டிருக்கும்.பத்தணந்திட்டை மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் வைக்கப்பட்டுள்ள இந்த அங்கி, ஒவ்வொரு ஆண்டும் மண்டலபூஜைக்கு நான்கு நாட்கள் முன்னதாக பவனியாக எடுத்து வரப்படுகிறது. சபரிமலை மாதிரியில் வடிவமைக்கப்பட்ட ரதத்தில் அங்கி வைக்கப்பட்டு, வழிநெடுகிலும் பக்தர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. டிச., 23-ம் தேதி காலை 6.00 மணிக்கு ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலிலிருந்து இந்த பவனி பலத்த பாதுகாப்புடன் புறப்படுகிறது. டிச, 23-ம் தேதி ஓமல்லுார் பகவதி கோயிலிலும், 24-ம் தேதி கோந்நி முருங்கமங்கலம் கோயிலிலும், 25-ம் தேதி பெருநாடு சாஸ்தா கோயிலிலும் தங்கும் இந்த பவனி 26-ம் தேதி மதியம் பம்பை வந்தடையும். பம்பை கணபதி கோயில் அருகில் பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்படும் இந்த அங்கி, மாலை 3.00 மணிக்கு தலைச்சுமையாக சன்னிதானத்துக்கு கொண்டுவரப்படும். 26 மாலை 6.30 மணிக்கு தங்க அங்கி சார்த்தி, தீபாராதனை நடைபெறும். 27-ம் தேதி மண்டலபூஜை நேரத்திலும் ஐயப்பனுக்கு இந்த அங்கி அணிவிக்கப்பட்டிருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !