ஐயப்பன் கோவிலில் 18ம் படி 19ல் திறப்பு: இருபாலரும் தரிசிக்கலாம்
புன்செய் புளியம்பட்டி: புன்செய் புளியம்பட்டி நேரு நகரில் சித்தி விநாயகர், தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஐயப்பனுக்கு சபரிமலையில் உள்ளது போன்று, 18 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு ஆண்டு தோறும் மார்கழி மாதம் முதல் சனிக்கிழமை, 18ம் படி திறப்பு நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு வரும், 19ம் தேதி காலை, 7 மணிக்கு, நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி அன்று காலை, 6 மணிக்கு, 108 சங்காபிஷேகம், அலங்கார பூஜை நடக்கிறது. தொடர்ந்து மாலை, 6 மணி வரை, ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரும், 18ம் படியேற அனுமதிக்கப்படுவர். இரவு, 7 மணிக்கு, 18ம் படிக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, படி பூஜை நடைபெறுகிறது. இதையொட்டி,கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. முன்னதாக டிசம்பர், 18ம் தேதி மாலை, டானாபுதூர், கரிவரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து, செண்டை மேளத்துடன், தர்மசாஸ்தா ஐயப்பன் உற்சவர் ஊர்வலம் புறப்பட்டு, மெயின் ரோடு, சுல்தான் ரோடு, ஆதிபராசக்தி கோவில் வழியாக, ஐயப்பன் கோவிலை வந்தடையும்.