உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழக்கம்: ரங்கநாதர் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழக்கம்: ரங்கநாதர் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் நேற்று அதிகாலை திறக்கப்பட்டது. பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், 108 திவ்ய தேசங்களில் முதலாவதாக உள்ளது. ஆண்டுதோறும், ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

ரத்தின அங்கி:
முன்னதாக அதிகாலை, 3:45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளி மாலை உள்ளிட்ட பல்வேறு திருவாபரணங்களை அணிந்து புறப்பட்டார். ராஜமகேந்திரன் சுற்று வலம் வந்து, நாழிக்கேட்டான் வாசல் வழியாக, குலசேகரன் திருச்சுற்றில் உள்ள தங்கக் கொடி மரத்தை சுற்றி, துறைப் பிரகாரம் வழியாக அதிகாலை, 4:30 மணிக்கு சொர்க்க வாசல் பகுதியை அடைந்தார். பட்டர்களின் வேதபாராயணங்களை கேட்டருளிய நம்பெருமாள், அதிகாலை, 5:00 மணிக்கு பரமபத வாசல் என்னும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டதும், கடந்து சென்றார். நம்பெருமாளின் வருகைக்காக காத்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள், கோவிந்தா... கோவிந்தா... என, கோஷம் எழுப்பியபடி சொர்க்கவாசலை கடந்து சென்றனர்.சொர்க்க வாசலில் இருந்து வெளியேறிய நம்பெருமாள், ஆயிரங்கால் மண்டபம் முன் அமைத்திருந்த திருக்கொட்டகைக்கு, அதிகாலை, 5:15 மணிக்கு வந்து சேர்ந்தார்.தொடர்ந்து பக்தர்களுக்கு சேவை சாதித்து வந்த நம்பெருமாள், மீண்டும், நேற்று இரவு, 12:00 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, நள்ளிரவு, 1:15 மணிக்கு மூலஸ்தானத்தை சென்றடைந்தார்.

பகல் பத்து உற்சவம் நிறைவு பெற்று, ராப்பத்து உற்சவம் துவங்கியதை அடுத்து, வரும், 26ம் தேதி வரை மதியம், 1:00 முதல், இரவு, 8:00 மணி வரையும், 27ம் தேதி மாலை, 4:15 முதல், இரவு, 8:00 மணி வரை பரமபத வாசல் திறந்து இருக்கும். டிசம்பர், 28ம் தேதி ராப்பத்து எட்டாம் நாள் அன்று பரமபத வாசல் திறக்கப்படாது. டிசம்பர், 29ம் தேதி மதியம், 1:00 முதல், இரவு, 8:00 மணி வரையும், 30ம் தேதி காலை, 10:00 முதல், இரவு, 8:00 மணி வரையும் பரமபத வாசல் திறந்திருக்கும்.இந்த நாட்களில், பக்தர்கள் பரமபத வாசலை கடந்து செல்லலாம். வரும், 31ம் தேதி நம்மாழ்வாருக்கு மோட்சம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் ஜனவரி, 1ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைகிறது.

திருக்கோவிலுார்:நடுநாட்டு திருப்பதி என போற்றப்படும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான, திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, அதிகாலை 3:00 மணிக்கு, மூலவர் பெருமாள் முத்தங்கி சேவையில் விஸ்வரூப தரிசனம், 4:30 மணிக்கு, திருப்பாவை சாற்று மறை, ஸ்ரீதேவி, பூதேவி சமேத தேகளீச பெருமாள், சிறப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து எழுந்தருளினார். பின், காலை, 5:30 மணிக்கு, பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, பக்தர்களின் கோவிந்தா... கோஷம் விண்ணை முட்ட, பெருமாள், சொர்க்க வாசல் வழியாக மண்டபத்தினுள் எழுந்தருளினார். தேகளீச பெருமாள், நம்மாழ்வாருக்கு காட்சியளித்ததை அடுத்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !