மாரியம்மன் கோவில் திருவிழா: மஞ்சள் புடவைக்கு கிராக்கி
ஈரோடு: ஈரோட்டை சுற்றியுள்ள மாரியம்மன் கோவில்களில் திருவிழா துவங்கியுள்ளதால், மஞ்சள் புடவைக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில், ஊஞ்சலூர், சலைப்புதூர், கருங்கல்பாளையம், வீரப்பன்சத்திரம், சூரம்பட்டிவலசு, ஈரோடு பெரியமாரியம்மன், கோட்டை பத்திரகாளியம்மன், கோவில் குன்டம் தேர்த் திருவிழா, கார்த்திகையில், தொடங்கி, பங்குனி மாதம் வரை, ஒவ்வென்றாக நடக்கும். இதில் விரதம் இருந்தும், நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில், குன்டம் இறங்கும், தீச்சட்டி, அலகு குத்தும் பக்தர்கள், விழா தொடங்கியவுடன், கையில் காப்பு கட்டி, மஞ்சள் ஆடைகளை உடுத்தி விரதம் இருப்பது வழக்கம். தற்போது, ஈரோட்டை சுற்றியுள்ள, 30க்கும் மேற்பட்ட கிராமங்களிலும், அருகாமையில் உள்ள மாவட்டங்களிலும் மாரியம்மன் கோவில் பண்டிகைகள் துவங்கியுள்ளது. இதனால், ஈரோடு கனிமார்கெட்டில், மஞ்சள் சேலைக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.
இது குறித்து கனிமார்கெட் வியாபாரிகள் தெரிவித்ததாவது: ஈரோடு, திருச்செங்கோடு, கிராமபகுதிகளில் மாரியம்மன், காளியம்மன் கோவில் பண்டிககைள் துவங்கியுள்ளதால், ஈரோட்டில் மஞ்சள் புடைவைகள் விற்பனை அதிகரித்துள்ளது. வெட்டுக்காட்டு வலசு, வடமாநிலங்களான அகமதாபாத், சூரத், போன்ற பகுதிகளில் இருந்து, பிரின்டிங் காட்டன், பூணம் புடவைகள், விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. இதில் ஈரோடு வெட்டுக்காட்டு வலசு காட்டன் புடவைக்குத்தான் மவுசு, அதனால் விற்பனை அதிகமாக இருக்கும். இருப்பு இருந்த புடவைகள் கடந்த மாதம் நடந்த கருங்கல்பாளையம் உள்ளிட்ட சில பகுதிகளில் நடந்த திருவிழா சமயத்தில் விற்பனை செய்யப்பட்டதால், தற்போது மஞ்சள் புடவைக்கு டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. விலையில் எந்த மாற்றமும் இல்லை. சில்லரை விலையில், 125, முதல், 250 ரூபாய் வரை, நான்கு ரகங்கள் உள்ளன. கிராம சந்தை வியாபாரிகள், வெளிமாவட்ட வியாபாரிகள், என ஒரு லட்சம் புடவைகள் விற்பனையாகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.