புதுச்சேரி தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கோலாகலம்!
புதுச்சேரி: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, புதுச்சேரி தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனைகள் நடந்தன. இதில், திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
புனித ஜென்மராக்கினி மாதா ஆலயம் மிஷன் வீதி புனித ஜென்மராக்கினி மாதா ஆலயத்தில் நடந்த விழாவில், புதுச்சேரி – கடலுார் உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடந்தது. அதைத் தொடர்ந்து, முதன்மை குரு அருளானந்தம், பாதிரியார் கிரிகோரி, ஆலய பங்குத்தந்தை அல்போன்ஸ் சந்தானம், உதவி பாதிரியார்கள் பிரவின்குமார், லெலின் ஆகியோர் குழந்தை ஏசுவின் சொரூபத்தை குடிலில் வைத்தனர். விழாவில், அயல்நாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
துாய இருதய ஆண்டவர் பசிலிகா இரவு 11:30 மணிக்கு, குழந்தை ஏசு பிறப்பு நிகழ்ச்சி துவங்கியது. நள்ளிரவு 12:00 மணிக்கு, பங்குத் தந்தை மரிய ஜோசப், குழந்தை ஏசு சொரூபத்தை ஏந்தி வந்து குடிலில் வைத்தார். புனித லூர்து அன்னை ஆலயம்,
வில்லியனுார்: பங்குத்தந்தை ரிச்சர்ட் தலைமையில், 11:45 மணிக்கு சிறப்பு திருப்பலிக்கு பிறகு, 12:00 மணிக்கு குழந்தை ஏசுவை குடிலில் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. லுார்து அன்னை மாதா ஆலயம் மற்றும் புனித குளம் உள்ளிட்ட பகுதி முழுவதும் வண்ண மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.
புனித விண்ணேற்பு அன்னை ஆலயம் நெல்லித்தோப்பு: பங்குத் தந்தை குழந்தைசாமி, உதவி பங்குத்தந்தை ஜான்பால்ராஜ் தலைமையில், நள்ளிரவு 12:00 மணிக்கு குழந்தை ஏசுவின் சொரூபம் குடிலில் வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, 1:30 மணி வரை சிறப்பு திருப்பலி நடந்தது.
பாத்திமா அன்னை ஆலயம், தட்டாஞ்சாவடி: இரவு 11:45 மணிக்கு, சிறப்பு திருப்பலி துவங்கியது. நள்ளிரவு 12:00 மணிக்கு, ஆலய பங்குத் தந்தை லாரன்ஸ், குழந்தை ஏசுவின் சொரூபத்தை ஏந்தி வந்து, குடிலில் வைத்தார். நிகழ்ச்சியில் முதல்வர் ரங்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ரெட்டியார்பாளையம் புனித அந்திரேயர் ஆலயம்: ரெயின்போ நகர் புனித ஜான்மரி வியான்னி ஆலயம் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலிகள் நடந்தன.