5000 ஆண்டுகளுக்கு முன்பே ஏறு தழுவுதல் ஓவியங்கள்!
மதுரை;சிந்து சமவெளியில் 5000 ஆண்டுகளுக்கு முன் ஏறு தழுவுதல் நடந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன, என்கிறார் மொழியியல் ஆய்வாளர் கா.ரா.செந்தில்குமார். அவர் கூறியது: உலகில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு உதவியாக இருப்பது விவசாயம். விவசாயத்திற்கு உதவியாக இருப்பது சூரியன், காளைகள், பசுக்கள். தமிழகத்தில் விவசாயம், பசு, காளை இனங்களை அழிக்க வெளிநாடுகளில் உள்ள சில அமைப்புகள் முயற்சி செய்கின்றன. உலக நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் சிந்து சமவெளியில் (இன்றைய கிஸ்தான்) சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் ஏறு தழுவுதல் நடந்துள்ளது என ஆய்வாளர்கள் ஐராவதம் மகாதேவன், சாத்துார் சேகரன், பின்லாந்தின் அஸ்கோ பர்போலா அறிவித்துள்ளனர். எனது ஆய்வின்படி, கிரேக்க மாகாணம் கிரீட் தீவின் க்னோசோஸ் மற்றும் பைட்டோஸ் ஆகிய இடங்களில் உள்ள சுவர்களில் ஏறுதழுவும் ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன. ஏறு தழுவுதல் எனும் தொல்தமிழரின் பண்பாட்டு அடையாளம், 5000 ஆண்டுகளுக்கு முன் கிரீட் தீவில் வாழ்ந்த மினோயன் நாகரிகத்திலும் இருந்துள்ளது. கிரீட் தீவில் காளை என்பது ஒரு தேவதைக்கு சமம். தமிழர்கள் அதை கடவுளுக்கு சமமாக மதித்து இன்றும் வழிபடுகின்றனர்.
கிரீட் தீவில் முருகன்: கிரீட் தீவில் தெய்வங்களுக்கு எல்லாம் முன்னோடியான ஒரு தலைவன், தலைவி, இவர்களுக்கு ஒரு பிரியமான மகன் இருந்தான். அவன் என்றும் இளமை உடையவன். இந்த தெய்வத்துக்கு மினோயர்கள் வைத்த பெயர்... வேல் கண்ணன். கிரேக்கர்கள் இதனை வேல் கனோஸ் என அழைத்தனர். இந்த தெய்வம் நமது தமிழ்க் கடவுளான வேலனே. இத்தகைய சிறப்புகள் உள்ள நாம், ஜல்லிக்கட்டு எனும் ஏறுதழுவுதலை தொடர்ந்து நடத்த வேண்டும்; காளைகளுக்கு மரியாதை செலுத்தி, நம் பாரம்பரியத்தை நிலைநாட்ட வேண்டும் என்றார். தொடர்புக்கு 91506 46355