சோலைமலை முருகன் கோயில் தைப்பூச விழா கொடியேற்றம்!
அழகர்கோவில்: அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயில் தைப்பூசத் திருவிழா (ஜன.,15) காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
இக்கோயிலில் கடந்த ஆண்டு புதிதாக தங்கக் கொடிமரம், சஷ்டி மண்டபமும் அமைக்கப்பட்டு
கும்பாபிஷேகம் நடந்தது. இதைதொடர்ந்து கடந்த ஆண்டு முதல் 10 நாள் தைப்பூசத் திருவிழா
நடக்கிறது. (ஜன.,15) காலை 6.00 மணிக்கு மூலவருக்கு பல்வேறு அபிஷேகம், ஆராதனைகள் முடிந்து தங்கக்கவசம், வைரவேல் அணிவிக்கப்பட்டது. காலை 9.00 மணிக்கு சிம்மாசனத்தில் புறப்பட்ட சுவாமி, கொடிமரம் முன் எழுந்தருளினார். காலை 10.05 மணிக்கு மயில் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டு தீபாராதனைகள் நடந்தன. தினமும் காலையில் சிம்மாசனம், மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வலம் வருகிறார்.
தேரோட்டம் ஜன.,23ல் நடக்கிறது. அன்று மாலை வெள்ளி மயில் வாகன புறப்பாடும், மறுநாள் கொடியிறக்கமும் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி செல்லத்துரை செய்து வருகின்றனர்.