உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காணும் பொங்கல் கொண்டாட்டம் அலைமோதிய மக்கள் கூட்டம்

காணும் பொங்கல் கொண்டாட்டம் அலைமோதிய மக்கள் கூட்டம்

தமிழகம் முழுவதும், நேற்று காணும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னை முதல், கன்னியாகுமரி வரை, அனைத்து மாவட்டங்களிலும், கடற்கரை, பூங்காக்கள், படகு குழாம்கள், சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை நகரில், காலையில் இருந்தே மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைக்கு பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வரத் துவங்கினர். திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து, வேன் மற்றும் கார்களில் பொதுமக்கள்வந்திருந்தனர். பிற்பகலுக்கு பின், மெரினா கடற்கரை முழுவதுமே மணல் பரப்பே தெரியாத அளவுக்கு மனித தலைகளாகவே காட்சி அளித்தது. காணும் பொங்கல் கொண்டாட்டத்துக்காக தங்கள் வீடுகளில் இருந்து, பலர் உணவு வகைகளை சமைத்து எடுத்து வந்திருந்தனர். அதை மணல் பரப்பில் அமர்ந்தபடியே அனைவரும் உண்டு மகிழ்ந்தனர். இதனால், நேற்று மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை திருவிழாக்கோலம் பூண்டது.சென்னை, கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவிலும் சிறுவர், சிறுமியர் கூட்டம் அதிகமாக இருந்தது. பூங்காவில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகளை கண்டு பரவசம் அடைந்தனர். கன்னியாகுமரி, ஊட்டி, கொடைக்கானல், முட்டுக்காடு, முதலியார்குப்பம் உள்ளிட்ட படகு குழாம்களில் படகு சவாரி செய்ய கூட்டம் குவிந்தது. அவசர உதவிக்காக, சுற்றுலா மையங்களில், ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !