உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாடலீஸ்வரர் கோவிலில் கணு பொங்கல் உற்சவம்!

பாடலீஸ்வரர் கோவிலில் கணு பொங்கல் உற்சவம்!

கடலுார்: கடலுார், பாடலீஸ்வரர் கோவிலில் கணு பொங்கல் மற்றும் மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் இரண்டாம் நாளான மாட்டு பொங்கலையொட்டி கடலுார், பாடலீஸ்வரர் கோவிலில் அன்று காலை 7:00 மணிக்கு கணு பொங்கல் உற்சவம் நடந்தது. அதனையொட்டி பாடலீஸ்வரர் மற்றும் பெரியநாயகிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்தை தொடர்ந்து தீபாராதனை நடந்தது. பின்னர் உற்சவர் பராசக்தி அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உற்சவர், சிவகர தீர்த்த குளத்தில் எழுந்தருளி, மஞ்சள் பூசும் நலங்கு உற்சவம் மற்றும் மாடவீதியுலா நடந்தது. மாலை மாட்டு பொங்கல் உற்சவத்தையொட்டி உற்சவர் சந்திரசேகருக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனையும், பின்னர் கோவிலின் கோசாலையில் உள்ள பசுக்களை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, புதிய கயிறுகள் மாற்றி, வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து கோசாலை அருகில் பொங்கல் வைத்து  தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பசுக்களுக்கு பழங்கள், காய்கறிகள் மற்றும் அகத்தி கீரை வழங்கப்பட்டது. நாளை (19ம் தேதி) ஆற்றுத் திருவிழாவையொட்டி,  உற்சவர் சந்திரசேகர் காலை 7:00 மணிக்கு புறப்பாடாகி 10:00 மணிக்கு மஞ்சக்குப்பம், தென்பெண்ணையாற்றில் எழுந்தருளுகிறார். அங்கு தீர்த்தவாரி  மற்றும் தீபாராதனை நடைபெற்ற பின் புறப்பாடாகி முக்கிய வீதிகள் வழியாக பகல் ஒரு மணிக்கு கோவிலை வந்தடைகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !