உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காணும் பொங்கல் விழா: 10 ஆயிரம் ஆடுகள் பலியிட்டு விருந்து

காணும் பொங்கல் விழா: 10 ஆயிரம் ஆடுகள் பலியிட்டு விருந்து

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காணும் பொங்கல் விழாவையொட்டி, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு உறவினர்களுக்கு பொதுமக்கள் விருந்து வைத்தனர். பொங்கல் பண்டிகை கடந்த, 15ம் தேதி கொண்டாடப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டது. விவசாயிகள் தாங்கள் வளர்த்து வந்த மாடுகளை குளிப்பாட்டி, அதன் கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, அவற்றுக்கு பொங்கல் படைத்து வழிபட்டனர். இதன் தொடர்ச்சியாக நேற்று காணும் பொங்கல் விழா நடந்தது. இதையொட்டி கிருஷ்ணகிரி அடுத்த கே.ஆர்.பி., அணை, அவதானப்பட்டி சிறுவர் பூங்கா உள்ளிட்ட இடங்களில், ஏராளமான பொதுமக்கள் காலை முதலே குவியத் துவங்கினர். கிருஷ்ணகிரி, பர்கூர், காவேரிப்பட்டணம், வேப்பனப்பள்ளி, ஓசூர் பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள், தங்கள் குடும்பத்தினருடன் அணை மற்றும் பூங்கா, படகு இல்லத்துக்கு வந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். காணும் பொங்கலையொட்டி, சுற்றுலாத்தலங்களில் தற்காலிக கடைகள் ஏராளமாக அமைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக கே.ஆர்.பி., அணை பகுதியில் மீன் கடைகள் ஏராளமாக அமைக்கப்பட்டிருந்தது. மீன் வாங்க சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர். கிருஷ்ணகிரி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில், காணும் பொங்கலையொட்டி, கோலப்போட்டி, பானை உடைத்தல், கயிறு இழுத்தல், இசை நாற்காலி உட்பட பல்வேறு விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. காணும் பொங்கலையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஆடுகள், 25 ஆயிரத்திற்கும் அதிகமான கோழிகள், குல தெய்வத்துக்கு பலியிட்டு, தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு விருந்தளித்தனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளிலும், நேற்று இறைச்சி விற்பனை அமோகமாக இருந்தது. போச்சம்பள்ளி அடுத்த நாகர் கோவிலில் நடந்த தேரோட்டத்தில், ஆயிரக்ணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !