புதுச்சேரியில் மூன்று கோவில்களில் நாளை கும்பாபிஷேகம்
புதுச்சேரி: புதுச்சேரியில் வரதராஜபெருமாள், வில்லியனுார் திருக்காமீஸ்வரர், திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரர் ஆகிய மூன்று கோவில்கள் கும்பாபிஷேகம் நாளை (20ம் தேதி) நடக்கிறது. புதுச்சேரியில் பழமை வாய்ந்த கோவில்களில் காந்தி வீதியில் உள்ள பெருந்தேவி தாயார் சமேத வரதராஜபெருமாள் கோவிலும் ஒன்று. சிறப்புகளை பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலுக்கு 1998 ம் ஆண்டு சம்ப்ரோஷணம் நடந்தது. தற்போது, ரூ. 4 கோடி செலவில் திருப்பணிகள் முடிந்து, வரும் 20ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. திருக்காமீஸ்வரர் கோவில்: வில்லியனுாரில், 11ம் நுாற்றாண்டில் தர்மபால சோழனால் கட்டிய வரலாற்றுச் சிறப்புடைய, கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் ரூ. 11.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, 2012ம் ஆண்டு டிசம்பரில் கும்பாபிஷேக திருப்பணி துவங்கியது. மூலவர் விமானம் மற்றும் முருகர், விநாயகர் சன்னதிகளின் விமானங்கள் புதுப்பிப்பு, 36 அடி உயர புதிய கொடி மரம், திருக்காமீஸ்வரர் மூலவர் சன்னதிக்கு எதிரிலும், அம்பாள் சன்னதி எதிரில், 27 அடி உயரத்தில் மற்றொரு கொடி மரமும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. கோவில் திருப்பணிகள் முடிந்து, வரும் 20ம் தேதி காலை 9:00 மணிக்கு மேல் 10:00 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரர்: வில்லியனுார் அடுத்த திருக்காஞ்சியில், ஸ்ரீ காமாட்சி, ஸ்ரீ மீனாட்சி உடனுறை கெங்கவராக நதீஸ்வரர் ஆலயம் உள்ளது. காசியை விட வீசம் அதிகம் என்ற சிறப்புடைய இத்தலத்தில், அகத்திய பெருமான் திருகரங்களால் 3000 ஆண்டுகளுக்கு முன்பு பிரதிஷ்டை செய்த சிவலிங்கம் இருப்பதும், ராகு, கேது பூஜித்த தலம் என பல்வேறு சிறப்புகளை பெற்றது. பழமையான இக்கோவில் திருப்பணிகள் முடிந்து, நாளை 20ம் தேதி காலை 9:00 மணி முதல் 10:00 மணிக்குள், கும்பாபிஷேகம் நடக்கிறது.