400 ஆண்டு பாரம்பரிய நகரத்தார் பழநிக்கு காவடி யாத்திரை!
நத்தம்: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, தேவகோட்டை, கண்டனுார் பகுதிகளை சேர்ந்த 400 ஆண்டுகள் பாரம்பரியமிக்க நகரத்தார் குழுவினர் 317 காவடி களுடன் பழநி பாதயாத்திரை சென்றனர். ஜன.,17 அன்று குன்றக்குடியில் ஒன்று சேர்ந்து மறுநாள் காலை அரண்மனை பொங்கல் பழனியப்ப செட்டியார் மற்றும் கண்டனுார் பழனியப்ப செட்டியார் தலைமையில் நகரத்தார் காவடிகள் புறப்பாடு நடந்தது.சிவகங்கை மாவட்டம் மருதிப்பட்டியில் மகேஸ்வர பூஜை முடித்து, ஜன.,19 அன்று நத்தம் அருகே சமுத்திராபட்டியில் தங்கி பூஜைகள் செய்தனர். நேற்று நத்தம் வழியாக கன்னியாபுரம் உப்பாறு அடைந்து இடைச்சிமடத்தில் தங்கினர். இன்று திண்டுக்கல் வழியாக யாத்திரை தொடர்ந்து ஜன., 23 அன்று பழநி சேர்வர். ஜன., 26 அன்று மலைக்கோயிலில் காவடி செலுத்துகின்றனர். ஜன., 30 அன்று மீண்டும் நடை பயணமாகவே தங்கள் பகுதிக்கு திரும்புகின்றனர்.காரைக்குடி பகுதியை சேர்ந்த நாட்டார் எனப்படும் மற்றொரு குழுவினர் நுாற்றுக்கும் மேற்பட்ட காவடிகளுடன் பாதயாத்திரை சென்றனர். இதே போல் ராமநாதபுரம் மாவட்டம் முது குளத்துாரை சேர்ந்த குழுவினரும் காவடி எடுத்துச்சென்றனர்.