உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்

உடுமலை முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்

உடுமலை: கிருத்திகையை முன்னிட்டு, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள, முருகன் கோவில்களில், சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. உடுமலை முத்தையா பிள்ளை லே-அவுட், சக்தி விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள, வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர் சன்னதியில், கிருத்திகையை முன்னிட்டு மாலை, 5:30 மணிக்கு, மூலவர் மற்றும் உற்சவருக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. வெள்ளிக் கவச அலங்காரம், தீபாராதனையுடன், உற்சவர் கோவில் பிரகாரத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தளி ரோடு, போடிபட்டி, பாலதண்டாயுதபாணி கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், பூஜை நடந்தது. பிரசன்ன விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள, முருகன் சன்னதியில், சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. உடுமலை கார்த்திகை விழா மன்றம் சார்பில், கோவில் வளாகத்தில் பக்தி மெல்லிசை நிகழ்ச்சி நடந்தது. மடத்துக்குளம்,பாப்பான்குளத்தில் உள்ள, ஞான தண்டாயுதபாணி கோவிலில், காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், மாலையில், உற்சவருக்கு அபிஷேக ஆராதனையும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !