ஆலயங்களில் சிறப்பு வழிபாடு
காரைக்குடி: இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவு கூறும் வகையில், கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலம் அனுஷ்டிக்கின்றனர். முதல் நாளான நேற்று சாம்பல் புதனாக அனுஷ்டிக்கப்பட்டு, ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது. கடந்த ஆண்டு குருத்தோலையின் போது பயன்படுத்திய ஓலைகள் எரிக்கப்பட்டு, கிறிஸ்தவர்களின் நெற்றியில் விபூதியாக இடப்பட்டது. அன்பின் கூறுகளில் வளருவதற்கு தடையாக இருக்கும் தன்னலத்தை வெற்றி கொள்ள, இந்த நாற்பது நாட்கள் கிறிஸ்தவர்கள் நோன்பு கடை பிடிக்கின்றனர்.
காரைக்குடி செஞ்சை புனித தெரசாள் ஆலயத்தில் பங்கு தந்தை அந்தோணிசாமி, அரியக்குடி வளன்நகர் குழந்தே இயேசு ஆலயத்தில் அந்தோணி மைக்கேல், செக்காலை சகாய மாதா ஆலயத்தில் வின்சென்ட் அமல்ராஜ், ஆவுடை பொய்கை புனித அந்தோணியார் ஆலயத்தில் அருள் ஜோசப் திருப்பலியை நிறைவேற்றி, கிறிஸ்தவர்கள் நெற்றியில் சாம்பலால் சிலுவை அடையாளமிட்டனர்.