உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊத்துக்குழி கருங்கற்களில் சுவாமி சிலைகள்: கும்பாபிஷேக சீசனால் விற்பனை அமோகம்

ஊத்துக்குழி கருங்கற்களில் சுவாமி சிலைகள்: கும்பாபிஷேக சீசனால் விற்பனை அமோகம்

ஓசூர்: திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியில் இருந்து கொண்டு வரப்படும் கருங்கற்களில்
செய்யப்படும் விநாயகர், பெருமாள் மற்றும் அம்மன் சிலைகள், கும்பாபி?ஷக சீசனால் அதிகளவு விற்பனையாகி வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சுற்று வட்டார பகுதிகளில், ஸ்வாமி சிலைகள் செய்யும் பணி
பிரதானமாக நடக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் மலை சூழ்ந்த பகுதி என்ற போதும், இங்கு
கிடைக்கும் கருங்கற்களை கொண்டு ஸ்வாமி சிலைகள் செய்ய முடிவதில்லை. இங்குள்ள
கருங்கற்கள் மிகவும் பலம் வாய்ந்தது என்பதால், இந்த கற்களில் சிலை செய்யும் போது, சிலை முழு உருவம் பெறுவதற்கு முன்பு உடைந்து விடும். அதனால், ஓசூர் பகுதியில் ஸ்வாமி சிலை செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் இருந்து கருங்கற்களை வாங்கி வருகின்றனர். பூமிக்குள் இருந்து வெட்டி எடுக்கப்படும் கருங்கற்களில், விநாயகர், பெருமாள், அம்மன், முருகன், அனுமன் உள்ளிட்ட பல்வேறு ஸ்வாமி சிலைகளை செய்து, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர் மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து, ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மாருதி நகர் பகுதியில், ஸ்வாமி சிலைகள் செய்து, விற்பனை செய்யும் முருகானந்தம் கூறியதாவது: ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர், ஆறு மாத காலத்திற்கு கோவில் திருவிழா மற்றும் கும்பாபிஷேகம் அதிகளவு நடக்கும். இந்த காலக்கட்டத்தில் ஸ்வாமி சிலை விற்பனை நன்றாக இருக்கும். வாரத்தில், 10 முதல், 20 சிலைகள் விற்பனையாகும். இதன் விலை, 3,000 ரூபாயில் இருந்து, 50 ஆயிரம் ரூபாய் வரை, நான்கு அடி உயரத்தில் சிலைகளை செய்து கொடுக்கிறோம். அம்மன் சிலைகள் தான் தற்போது அதிகளவு விற்பனையாகிறது. அதுதவிர, பெருமாள், முருகன், விநாயகர், நந்தி, ஹனுமன், லட்சுமி நரசிம்மர் போன்ற சிலைகளும் விற்பனை செய்யப்படுகிறது. ஊத்துக்குளியில் இருந்து கிடைக்கும் கற்கள் மூலம் மட்டுமே, சிலைகளை செய்ய முடியும். எங்களிடம் விற்பனையாகும் அனைத்து சிலைகளும் ஒரே கல்லில் செய்யப்படுவது தான். குடும்ப தொழிலாக இதை செய்து வருகிறோம். ஒரு சிலை ஆர்டர் கொடுத்தால், ஒரு மாதத்தில் இருந்து மூன்று மாதத்திற்குள் முடித்து கொடுத்து விடுவோம். தற்போது, கும்பாபி?ஷக சீசன் என்பதால் விற்பனை நன்றாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !