உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவொற்றியூர் பிரம்மோற்சவம் பந்தம்பறி நிகழ்வுடன் நிறைவு!

திருவொற்றியூர் பிரம்மோற்சவம் பந்தம்பறி நிகழ்வுடன் நிறைவு!

திருவொற்றியூர்: திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் பிரம்மோற்சவம் நேற்று அதிகாலை பந்தம்பறி மற்றும் 18 திருநடனத்துடன் நிறைவு பெற்றது. நிறைவு நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, தியாகராஜ சுவாமியை வழிபட்டனர்.


திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில், கடந்த, ௧௨ம் தேதி துவங்கிய பிரம்மோற்சவம், நேற்று முடிந்தது. நிறைவு நாளான நேற்று அதிகாலை, தியாகராஜ சுவாமி, வடிவுடையம்மன், விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரர், மாடவீதிகளை வலம் வந்தனர். பின் கோவிலுக்குள் சென்றனர். கோவிலுக்குள் வசந்த தீர்த்த குளத்தை சுற்றி, தியாகராஜ சுவாமி, வலமிருந்து இடமாக, ஒன்பது முறையும், வடிவுடையம்மன், இடமிருந்து வலமாக ஒன்பது முறையும் திருநடனம் புரிந்தனர். மங்கல இசை முழங்க வண்ண வண்ண பூக்கள் துாவப்பட்டன. அவற்றை பக்தர்கள் சேகரித்து, தங்கள் தலையிலும், பைகளிலும் வைத்துக் கொண்டனர். பின் வடிவுடையம்மனுக்கு, தியாகராஜ சுவாமி திருநடன காட்சி அளித்தார். இந்த நிகழ்வு பந்தம்பறி என அழைக்கப்படுகிறது. பந்தம்பறியை தரிசிக்க, நேற்று முன்தினம் இரவு முதல், கோவில் வளாகத்தினுள்ளும், கோவிலுக்கு வெளியேயும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கியிருந்தனர். உற்சவம் முடிந்த பின், வெளியூர் பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !