இளையனார்வேலுார் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தேரோட்டம் விமரிசை
காஞ்சிபுரம்: இளையனார்வேலுார் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை பிரம்மோத்சவத்தின் ஏழாம் நாளான இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.
காஞ்சிபுரம் ஒன்றியம், இளையனார்வேலுாரில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில், 12 நாட்கள் பிரம்மோத்சவம் விமரிசையாக நடக்கும். அதன்படி நடப்பு ஆண்டுக்கான பிரம்மோத்சவம், கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி முக்கிய வீதி வழியுலா உலா வருகிறார். பிரம்மோத்சவத்தின் ஏழாம் நாளான இன்று காலை தேரோட்டம் நடந்தது. இதில், அலங்கரிக்கப்பட்ட தேரில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளினார். அதிர்வேட்டுகள் முழங்க, பேண்டு வாத்தியம், மேளதாளம், கைலாய சிவகான வாத்தியங்கள் இசைக்க, அரோகரா என்ற கரகோஷத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரில் அசைந்து ஆடியபடியே முருகப்பெருமான் முக்கிய வீதி வழியாக பவனி வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர தீப ஆராதனை காண்பித்து சுவாமியை வழிபட்டனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது.