சூரியகிரகணம்: ராமேஸ்வரம் கோயிலில் சிறப்பு அபிஷேகம்!
ராமேஸ்வரம்: சூரியகிரகணத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கிரகணம் சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்றது.
இன்று சூரியகிரகணத்தை முன்னிட்டு, அதிகாலை 3 மணிக்கு ராமேஸ்வரம் கோயில் நடை திறந்து 4 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடந்தது. பின், கோயிலில் இருந்து காலை 4.50 க்கு பிரதோஷ உற்சவ மூர்த்தி சுவாமி (ராமநாதசுவாமி, பர்வதவர்த்தனி அம்மன்) தங்க ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி, அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளியதும், கோயில் நடை சாத்தப்பட்டது. அக்னி தீர்த்த கரையில் காலை 6.28 முதல் 6.38 மணி வரை வானில் பகுதி நேர சூரியகிரகணம் நடந்தது. சூரியகிரகணம் முடிந்ததும், பிரதோஷ உற்சவ மூர்த்தி சுவாமி காலை 6.39 க்கு பக்தர்களுக்கு தீர்த்த வாரி உற்சவம் நடந்ததும் மகா தீபாரதனை நடைபெற்றது. பின் காலை 6.50 க்கு பிரதோஷ உற்சவ மூர்த்தி புறப்பாடாகி, கோயிலுக்கு சென்றதும் நடை திறக்கப்பட்டது. கோயிலில் சுவாமி, அம்மனுக்கு கிரஹணம் சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.